சர்கார், விஜய் அப்படி என்ன அத்துமீறி விட்டார்?: ஒரு 'தல'பதி ரசிகரின் விமர்சனம்
சென்னை: சர்கார் படம் குறித்த ஒரு "தல"பதி ரசிகனின் விமர்சனம் இது. பேசிக்கலி இவர் தல ரசிகன், ஆனால் தளபதி படங்களையும் ரசிப்பவன் என்பதால் 'தல'பதி ரசிகன் என்று குறிப்பிட்டுள்ளோம்.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்கு ஆளுங்கட்சி தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் சில காட்சிகளை நீக்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் படம் பற்றி ஒரு தலபதி ரசிகனின் பார்வை.

விஜய்
விஜய் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். அரசியல் தொடர்பான காட்சிகள், அரசுத் துறைகளால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி விவரிக்கும் காட்சிகளில் விஜய் நிஜ உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார். அரசியலில் பெரும்புள்ளியான மாசிலாமணியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் காட்சிகள் அற்புதம். ஆனால் அது நிஜத்தில் நடப்பது சாத்தியம் இல்லை.

சண்டை
விஜய் டான்ஸ் ஆடுவதை பார்த்தால் அவருக்கு 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்றே கூற முடியாத அளவுக்கு உள்ளது. ஒரு பெரிய நிறுவனத்தின் சிஇஓ பவுன்சர்களை விட செமத்தியாக அடிப்பது ஓவராக உள்ளது. சென்னையில் கொளுத்தும் வெயிலில் விஜய்யை கோட், சூட்டில் சுற்றவிடாமல் இருந்திருக்கலாம். பரவாயில்லை, ஸ்டைலாகத் தான் இருந்தது.

கீர்த்தி
படத்தில் ஹீரோயினான கீர்த்தி சுரேஷுக்கு வேலையே இல்லை. ஓஎம்ஜி பெண்ணே பாடலில் அழகாக இருக்கிறார். மற்றபடி படத்தில் சும்மா விஜய்யுடன் தொத்திக் கொண்டு வருவதை பார்த்தால் சில சமயம் எரிச்சலாக உள்ளது. ஹீரோயின் என்ற ஒரு கதாபாத்திரம் இருக்க வேண்டுமே என்பதற்காக வைத்தது போன்று உள்ளது. கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரம் இல்லாமல் இருந்திருந்தாலும் படம் நன்றாக இருந்திருக்கும்.

வரலட்சுமி
வரலட்சுமி சரத்குமார் இதுவரை நடித்த படங்களில் சர்காரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றே கூற வேண்டும். அவரது கதாபாத்திரத்தின் நீளத்தை அதிகரித்திருக்கலாம். பணம், பதவிக்காக பெற்றோரையே கொல்லும் மகளாக நடிப்பில் அசத்தியுள்ளார் வரு. பணமும், பதவியும் படுத்தும் பாட்டை அழகாக விளக்கியுள்ளார் முருகதாஸ்.

நிஜம்
கழக இணைப்பு விழா மேடையில் இருந்து இறங்கி வந்த விஜய்யை போலீஸ் வாகனத்தில் வைத்து கொலை செய்யும் முயற்சி பார்ப்பவர்களை பயப்பட வைக்கிறது. விஜய் ஒரு ஹீரோ அதனால் போலீசாரை அடித்து தப்பிவிட்டார். அதே நிஜத்தில் யாராவது மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என்று வந்தால் அவர்களால் இப்படி சண்டை போட்டு தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுவதை விஜய்யால் கூட தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம்.

மாற்றம்
ஒரு ஓட்டால் என்னத்த கிழிக்கப் போகிறார் விஜய் என்று நினைத்தால் பெரிய அளவில் கிழித்துவிட்டார். அதை பார்க்கும்போது ஒரு நாள் முதல்வராக இருந்து என்னத்த பண்ணிவிடப் போகிறான் என்று முதல்வன் படத்தில் ரகுவரன் கூறியது நினைவுக்கு வருகிறது. ஒரு வேளை முதல்வன் படம் தற்போது ரிலீஸாகியிருந்தால் அதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்குமோ என்னவோ.

49 பி
சர்கார் படத்தில் மெசேஜ் சொல்லுகிறேன் என்று மொக்கை போடாமல் 49 பி உள்பட மக்களுக்கு தெரியாத சில விஷயங்களை சொல்லிக் கொடுத்துள்ளார் முருகதாஸ். முக்கியமாக ஆட்சி செய்பவர்களை கேள்வி கேட்க தூண்டிவிட்டுள்ளார் முருகதாஸ். அது தான் அவர் செய்த பெரிய தவறாகிவிட்டது.

பதில்
அரசியல்வாதிகளிடம் கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்டால் தானே பதில் கிடைக்கும் என்று சாதாரண மக்களுக்கு புரிய வைத்துள்ளார் முருகதாஸ். தமிழகத்தில் சில பிரச்சனைகள் தீராமல் இருப்பது ஏன், அதற்கு காரணம் என்ன என்பதையும் பளிச்சென்று கூறிவிட்டார் முருகதாஸ். இலவசங்கள் வேண்டாம், ஓட்டுக்கு பணம் வேண்டாம் என்று மக்கள் முடிவு செய்வது போன்ற காட்சியால் தான் முக்கியமாக எதிர்ப்பு கிளம்பியிருக்குமோ?. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். மற்றபடி சர்கார் தளபதி ரசிகர்கள் மட்டும் அல்ல அனைவரும் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











