நமிதா, பர்ஸானா அண்ட் சரத்!

சரத்குமார் தனது சொந்தப் பட நிறுவனமான ஆர்.எஸ்.கே. பிலிம்ஸ் சார்பில் உருவாக்கி வரும் பிரமாண்டமான படம் 1977. ரூ.15 கோடி செலவில் தயாராகி வரும் இந்தப் படத்தை புதிய இயக்குநர் ஜி.என். தினேஷ்குமார் இயக்குகிறார்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை மாலை சென்னை கிரீன் பார்க்கில் நடந்தது.
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் டிரைலரை வெளியிட்டார்கள். பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி., தயாரிப்பாளர்கள் கேயார், ஐங்கரன் பிலிம்ஸ் கருணாமூர்த்தி, டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், கே.பாலு, முருகன், பஞ்சு சுப்பு, இயக்குநர்கள் கஸ்தூரிராஜா, ஆர்.பார்த்திபன், நடிகர்கள் ஸ்ரீகாந்த், தனுஷ், ஜீவன், மும்தாஜ், மனோரமா மற்றும் விஜயகுமார் உள்பட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சரத்குமாரை வாழ்த்திப் பேசினர்.
பின்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சரத் கூறியதாவது:
நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் என் சொந்த பேனரில் படம் தயாரித்து நடிக்கிறேன். நிச்சயம் இந்தப் படம் மிக வித்தியாசமாக இருக்கும். 1977-ல் நடந்த ஒரு சம்பவம் சரித்திரமாகிறது. ஆனால் அதே சரித்திரம் மீண்டும் மாற்றி எழுதப்படுகிறது. இதன் சுவாரஸ்யமான பின்னணி என்ன என்பதுதான் படத்தின் கதை.
இந்தப் படத்தில் அரசியல் கிடையாது. பொதுவாகவே அரசியல் வேறு, சினிமா வேறு என நினைப்பவன் நான். என் படத்தை பல கட்சிகளின் ரசிகர்களும் பார்க்க வருவார்கள். படத்தில் என் கட்சியின் கொடி மட்டும் பறந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு வெறுப்பு வரக்கூடும் அல்லவா... அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட முடிவுதான் இது...." என்றார் சரத்.
இந்தப் படத்தில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் சரத். கதையின் போக்குக்கேற்ப 6 வித்தியாசமான கெட்டப்புகளில் வருகிறார்.
நமீதா, பர்ஸானா இருவரும் சரத்துக்கு ஜோடி. நமீதா இப்படத்தில் வழக்கறிஞராக வருகிறாராம் (அப்ப, வாதத்தில் சூடு பறக்கும்). பத்திகையாளர் வேடம் பர்ஸானாவுக்கு. இந்த இருவரையும் காதலிக்கும் சரத் இறுதியில் யாரைக் கல்யாணம் செய்து கொள்கிறார் என்பது ஒரு சுவாரஸ்யமான முடிச்சாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.
ரோஹித் எனும் மும்பை புதுமுகம் வில்லனாக அறிமுகமாகிறார். இவரைத் தவிர மேலும் இரு வில்லன்கள் உண்டு.
ஏ.பூபதி ஒளிப்பதிவு செய்கிறார். இசை வித்யாசாகர்.
படத்தின் பாடல் வெளியீடு பிரமாண்டமான முறையில் அடுத்தமாதம் நடைபெற உள்ளதாக சரத் குமார் தெரிவித்தார். ஜூன் மாதம் படம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











