மீண்டும் ரஜினி ஜோடி நயனதாரா!

இயக்குநர் பி.வாசுவின் இயக்கத்தில் உருவாகும் படம் குசேலன். மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படத்தின் ரீமேக்தான் இப்படம்.
மலையாளத்தில் மம்முட்டி, சீனிவாசன், மீனா முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். மம்முட்டி நடிகராக நடித்திருந்தார். அவரது பால்ய காலத் தோழனாக, சவரத் தொழிலாளி வேடத்தில் சீனிவாசனும், சீனிவாசனின் மனைவியாக மீனாவும் நடித்திருந்தனர்.
தமிழில் உருவாகவுள்ள குசேலனில் ரஜினியும், அவரது தோழனாக பசுபதியும் நடிக்கவுள்ளனர். பசுபதியின் ஜோடியாக நடிக்க வைக்க முதலில் சிம்ரனை முயன்றனர். ஆனால் அவர் அதிக சம்பளம் மற்றும் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டதால் இப்போது தபுவை கேட்டு வருகின்றனர். அதேபோல சினேகாவையும் கேட்டு வருகின்றனராம்.
மலையாளத்தில் மம்முட்டிக்கு ஜோடி கிடையாது. ஆனால் ரஜினிக்கு ஜோடி இல்லாமல் நடிக்க வைக்க முடியுமா?. எனவே அவருக்கு ஜோடியை உருவாக்கியுள்ளனர். அந்த ஜோடியாக நயனதாரா நடிக்கவுள்ளார்.
ரஜினியுடன் நயனதாரா சேருவது இது மூன்றாவது முறையாகும். முதல் படம் சந்திரமுகி. அதில் ஜோடி போட்டிருந்தார். 2வது சிவாஜியில் ஒரு பாட்டுக்கு ரஜினியுடன் ஆடியிருந்தார். இப்போது 3வது முறையாக குசேலன் படத்தில் அவரது ஜோடியாக நடிக்கவுள்ளார். குசேலன் தெலுங்குப் பதிப்பிலும் நயனதாராதான் நாயகியாக நடிக்கிறார்.
நயனதாரா குசேலனில் புக் ஆகியுள்ளது மற்றும் படம் குறித்த இதர முழு விவரங்களும் விரைவில் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு பிப்ரவரி 15ம் தேதி தொடங்குகிறது.
தற்போது இமயமலை பயணத்தை மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த், திரும்பி வந்த பிறகு படத்தின் முழு கலைஞர்கள் விவரமும் இறுதி செய்யப்படும். அதன் பின்னர் முறைப்படி அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications











