நாத்தனார் கொடுமை.. பாயும் வழக்கு.. கைதாகிறாரா நடிகை ஹன்சிகா மோத்வானி!
சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி தென்னிந்திய சினிமாவில் வலம் வரும் நடிகைகளில் ஒருவர். தனது திருமணத்திற்குப் பின்னரும் சினிமாக்களில் நடித்து வருகிறார். இவர் இப்போது ஒரு பெரிய சிக்கலில் சிக்கியுள்ளார் என்றுதான் கூற வேண்டும். அதாவது அவரது சகோதனின் மனைவி கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றம் அளித்த உத்தரவால் அவர் கதிகலங்கிப் போயுள்ளார் என்று கூறப்படுகிறது. அந்த புகார் முறையாக விசாரிக்கப்பட்டால் ஹன்சிகா மோத்வானி குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு, ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாட்களுக்குள் அவருடைய சகோதரர் பிரசாந்த் மோத்வானி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார். தற்போது ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மோத்வானியும் அவரது மனைவி முஸ்கான் நான்சி ஜேம்ஸும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஹன்சிகா மோத்வானி மற்றும் தாயார் மேனா மோதவானி ஆகியோர் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும், கணவருடன் இணைந்து வாழ முடிவெடுத்தாலும் அதற்கு இவர்கள் இருவரும் தடையாக இருக்கிறார்கள் என்று மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் கணவரையும் சேர்த்துள்ளார். இப்படி இருக்கையில் இந்த புகாரை அடுத்து ஹன்சிகாவும் அவரது தாயாரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்கிக் கொண்டார்கள்.

நிராகரித்த நீதிமன்றம்: இதையடுத்து இந்த வழக்கில் தங்களை விடுவிக்க வேண்டும் என்றும், தங்கள் மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். ஆனால் நீதிமன்றம் இவர்களின் கோரிக்கையை நிராகரித்தது மட்டும் இல்லாமல், இவர்கள் இருவர் மீதான புகாரையும் விரைவில் விசாரித்து அறிக்கை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் இப்படி உத்தரவு இடும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஹன்சிகா இப்போது அதிர்ச்சியில் உள்ளார்.
கைதாகிறாரா?: இன்னும் சொல்லப்போனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் வழக்கு விசாரணையை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். மேலும் விசாரணை முடிவில் ஹன்சிகா மோத்வானி கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. மும்பை உயர்நீதிமன்றம் தான் இவர்களின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. தேவைப்பட்டால் ஹன்சிகா உச்சநீதிமன்றத்தை கூட நாடுவார் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவர்கள் ஹன்சிகா மோத்வானி என்ன நாத்தனார் கொடுமை எல்லாம் செய்துள்ளாரா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











