எல்லோரும் பார்க்குற மாதிரி படம் எடுங்க...பீஸ்ட்டை கிழித்து தொங்க விட்ட கஸ்தூரி
சென்னை : ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுக்காதீங்க. எல்லோரும் பார்க்குற மாதிரி படம் எடுங்க என விஜய்யின் பீஸ்ட் படத்தை மிக கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகை கஸ்தூரி. தமிழ் சினிமாவின் தரம் பற்றியும் அவர் பேசி உள்ள வீடியோ செம டிரெண்ட் ஆகி உள்ளது.
பிரபல நடிகையான கஸ்தூரி, சமீப காலமாகவே சோஷியல் மீடியாவிலும் சரி, பேட்டி அளித்தாலும் சரி அது சர்ச்சையாகி விடுகிறது. அரசியல், சினிமா, விளையாட்டு என பல துறைகள் பற்றி இவர் கூறும் பல கருத்துக்கள் பரபரப்பை கிளப்பி, மிகப் பெரிய விவாதப் பொருளாகி வருவது வழக்கமாக உள்ளது. அப்படி தற்போது பீஸ்ட் படம் பற்றி பேசி உள்ளார்.

ஏமாற்றமடைந்த ரசிகர்கள்
ஏப்ரல் 13 ம் தேதி ரிலீசான விஜய் நடித்த பீஸ்ட் படம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனால் இந்த படம் ஏமாற்றத்தை தந்ததால் விஜய் ரசிகர்களே படத்தை விமர்சித்து வருகின்றனர். தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் பீஸ்ட் படத்தையும், டைரக்டர் நெல்சனையும் வெளுத்து வாங்கி வருகின்றனர். அதே சமயம் சிலர் விஜய்க்கும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஹிட் அடிக்கும் மற்ற மொழி படங்கள்
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த கஸ்தூரி, கொரோனாவிற்கு பிறகு மக்களை தியேட்டர்களுக்கு வரவழைத்தது கன்னடம் படம், தெலுங்கு படம் தான். ஹாலிவுட்டோ, பாலிவுட்டோ, தமிழ் சினிமாவோ இல்லை. ஒரு காலத்தில் தமிழில் எடுக்கும் படங்கள் செம ஹிட்டாகி, அந்த படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. நாம் தான் ரீமேக் ரைட்ஸ் வழங்கிக் கொண்டிருந்தோம்.

ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுக்காதீங்க
தற்போது எல்லாமே பான் இந்தியன் படங்கள் ஆகி விட்டன. ஓடிடியில் அனைத்து மொழி படங்களையும் பார்க்க முடிகிறது. அவற்றிற்கு ஈடு கொடுக்க தமிழ் படங்களின் நல்ல கன்டென்ட் இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும். ஹீரோவிற்காகவோ, தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர யுக்திக்காகவோ படம் எடுத்தால் ஓடாது. மக்களே அதை புறக்கணிக்கின்றனர். நான் மிகப் பெரிய விஜய் ரசிகை தான். பீஸ்ட் படத்தை 4 முறை கூட பார்ப்பேன். ஆனால் மற்றவர்கள் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் இல்லையா. ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுத்தால் போதாது. பொது மக்களும் விரும்பும் வகையில் படம் எடுக்க வேண்டும்.

கோல்டன் ஏஜ் ஆஃப் தமிழ் சினிமா
படத்தின் தரத்திற்கும் பட்ஜெட்டிற்கும் சம்பந்தம் இல்லை. படத்தின் கதைக்கும், வெற்றிக்கும் கூட சம்பந்தம் இல்லை. மறுபடியும் கோல்டன் ஏஜ் ஆஃப் தமிழ் சினிமா வர வேண்டும் என்ற நிலையில் தான் இருக்கிறோம். ராமராஜன் - இளையராஜா காம்பினேஷனில் கம்மியான பட்ஜெட்டில் பெரிய வெற்றியை எப்படி கொடுக்கலாம், நமது தமிழ் மனம் மாறாமல் கொடுத்தார்கள். பான் இந்தியாவிற்கும் நமது தமிழ் கலாசாரத்தை எடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும் என்றார்.
Recommended Video

எதுக்கு அரசியல் ஆக்குறீங்க
இளையராஜா, பிரதமர் மோடியையும் அம்பேத்காரையும் ஒப்பிட்டு பேசியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த கஸ்தூரி, அவர் மிகப் பெரிய மேதை. அவர் சாதாரணமாக தனது கருத்தை சொன்னார் அதை அரசியல் ஆக்கி விட்டார்கள். இதை பற்றி பேச நம் எல்லோரையும் விட ராஜா சாருக்கு தான் அந்த தகுதி இருக்கு. அவருடைய வார்த்தையில் இருக்கும் நல்ல பாசிடிவான கருத்துக்களை எடுக்காமல் எதற்காக சில்லரை தனமான அரசியலுக்கு அதை பயன்படுத்த வேண்டும் என்றார் கஸ்தூரி.


Click it and Unblock the Notifications











