விவாகரத்து கேட்கும் நடிகைகளுக்கு மத்தியில் கணவருடன் சேர்த்து வைக்க கோரும் ரம்பா
சென்னை: கோலிவுட்டில் விவாகரத்து சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் நடிகை ரம்பா தன்னை தனது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி நீதிமன்றம் சென்றுள்ளார்.
நடிகை அமலா பால் தனது காதல் கணவர் விஜய்யை பிரிந்து வாழ்கிறார். அவர் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்து வாழ்கிறார்.
இப்படி அடுத்தடுத்து விவாகரத்து சம்பவங்கள் நடக்கும் நிலையில் நடிகை ரம்பாவின் வழக்கு வித்தியாசமாக அமைந்துள்ளது.

பிரிவு
ரம்பாவுக்கும் அவரது கணவர் இந்திரன் பத்மநாதனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். இந்நிலையில் இந்து திருமணச் சட்டம் பிரிவு 9-ன் படி தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும், தன்னை அவருடன் சேர்த்து வைக்குமாறும் கூறி ரம்பா சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குழந்தைகள்
2 பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு தனியாக வாழ முடியாது என்றும், கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் ரம்பா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

திருமணம்
ரம்பாவுக்கும் கனடாவில் வசிக்கும் தொழில் அதிபரான இந்திரன் பத்மநாதனுக்கும் கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு ரம்பா கனடாவில் செட்டில் ஆகிவிட்டார்.

கனவுக்கன்னி
உழவன் படம் மூலம் கோலிவுட் வந்த ரம்பா பல ஆண்டுகளாக ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தார். அவர் பாலிவுட் பக்கமும் சென்று ஒரு ரவுண்டு வந்தார். நடிக்க வந்து 17 ஆண்டுகள் கழித்து திருமணம் செய்து செட்டிலானார்.


Click it and Unblock the Notifications











