மிகவும் மோசமான நாட்கள்.. நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன்..கண்கலங்கிய சமந்தா!
சென்னை : மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சமந்தா, வாழ்க்கையில் மிகவும் மோசமான நாட்கள் அது என்று பேட்டியில் கூறியுள்ளார்.
தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார். பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.
இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா. இவர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமான யசோதா திரைப்படம் உருவாகி உள்ளது. வாடகைத்தாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள மருத்துவக் குற்றங்களை அடிப்படையாகக் கொண்ட ஆக்ஷன் மற்றும் எமோஷனல் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

யசோதா ரிலீஸ்
யசோதா படம் நவம்பர் 11ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளதால், படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமந்தா பேசியுள்ளார் மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடும் சமந்தாவை விளம்பர நிகழ்ச்சியில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். கறுப்பு உடையில் கண்ணாடி அணிந்து கொண்டு மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
யசோதா படம் குறித்து பேசிய சமந்தா, ஹரி இப்படத்தின் கதையை என்னிடம் சொன்னதுமே நடிக்க சம்மதித்து விட்டேன். உண்மை சம்பவத்தைக் கொண்ட கதை இது. இதில் நிறைய சண்டை, த்ரில்லிங் எல்லாமே இருக்கு இந்த படத்தில் நடித்த போது உண்மையில் சந்தோஷமாக நடித்தேன். பல சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நானே நடித்து ஸ்டாண்ட் மாஸ்டரிடம் முகத்தில் குத்தும் வாங்கினேன் என்றார்

திரையரங்கில் பாருங்கள்
யாசோதா ஒரு தைரியமான பெண்ணின் கதை. எப்போதும் நான் கதை கேட்கும் போதும் ஆடியன்ஸ் சைடு இருந்து யோசிப்பேன். அதே போல படம் பார்க்கும் போதும் ஆடியன்சாக படம் பார்ப்பேன் அந்த வகையில் இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. இந்த படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்து இருக்கிறோம். இந்த படத்தை அனைவரும் கட்டாயம் திரையரங்கில் பாருங்கள் என்றார்.

மோசமான நாட்கள்
இதையடுத்து, தனது உடலை குறித்து பேசிய சமந்தா, நான் ட்விட்டரில் சொன்னது போல மோசமான நாட்களும் உண்டு, நல்ல நாட்களும் உண்டு. ஆனால், அந்த 3 மாதம் என் வாழ்க்கையில் மோசமான மாதமாகிவிட்டது. மருந்து,மாத்திரை, ட்ரிப்ஸ் என உடைந்துவிட்டேன். நான் பல அடியெடுத்து வைத்து வெகுதூரம் கடந்து வந்துவிட்டேன். இப்போது நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன் என்று கண்கலங்க கூறினார்.

பயந்தேன்
என் உடல்நிலை குறித்து என்னை நேசிக்கும் மக்களுக்கு தெரியவேண்டும் என்று நினைத்தேன். அதே நேரம் மோசமான கமெண்டுகள் வந்து என்னை மேலும் பலவீனமாக்கிவிடுமோ என்று பயந்தேன் என்றார். சமந்தாவின் இந்த பேட்டியை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமந்தா விரைவில் நலம்பெற்று, நல்ல உடல்நலனுடன் வலிமையாக திரும்பி வர வேண்டும் என்று வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











