யாரையும் காதலிக்கலீங்க.. எல்லாம் சும்மா வதந்தி! - சொல்கிறார் அஞ்சலி
நான் யாரையும் காதலிக்கவில்லை. அப்படி வரும் செய்திகள் பொய்யானவை என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னை திரும்பியிருக்கும் அஞ்சலி, சமீபத்தில் அளித்த பேட்டி:

குண்டானது ஏன்?
நான் குண்டாகிவிட்டதாக சொல்கிறார்கள். பார்ப்பவர்களுக்கு உண்மை தெரியாது. சகலகலா வல்லவன் படத்துக்காக எடை போட வேண்டும் என கேட்டுக் கொண்டதால் இப்படி தெரிகிறேன். உடனே தைராய்ட் அது இது கண்டபடி எழுதுகிறார்கள்.

எடைக் குறைப்பு
எதையுமே தெரிந்து கொள்ளாமல் எழுதுவதில் நம்மாளுங்களுக்கு இணையே இல்லை. தற்போது விஜய்சேதுபதியுடன் 'இறைவி' படத்தில் நடிக்கிறேன். இந்த படத்துக்காக எடையை குறைக்கும் படி இயக்குநர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஆறு கிலோ எடை குறைத்திருக்கிறேன். இன்னும் குறைப்பேன்.

அமெரிக்கா போனது ஏன்?
எனக்கு அமெரிக்காவில் காதலன் இருப்பதாகவும் அதனால் அடிக்கடி அமெரிக்காவுக்கு சென்று விடுவதாகவும் வதந்தி பரவி உள்ளது. இதில் உண்மை இல்லை. தெலுங்கில் தயாரான 'சித்ரகதா' படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது. அந்த படத்தின் கதையும் அமெரிக்காவில் நடப்பது போன்றதுதான். அதற்காக போய் வந்தேன்.

வதந்திகள்
என்னைப் பற்றி வரும் செய்திகள் பெருமளவு பொய்கள்தான்.. நான் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் வதந்தி பரப்புவதே வேலையாக வைத்திருக்கிறார்கள். தமிழில் நான்கு படங்களிலும் தெலுங்கில் நான்கு படங்களிலும் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











