பொது இடத்தில் ஒருவர் கேட்ட கேள்வி.. மிகவும் அவமானமாக உணர்ந்தேன்.. அபர்ணா பாலமுரளி பேட்டி!
சென்னை: மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி, 2015 ஆம் ஆண்டு முதல் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு பெரியளவில் புகழ் வெளிச்சத்தை கொடுத்தது தமிழ் படங்கள் தான். தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறி இருக்கும் அபர்ணா பாலமுரளி, உருவ கேலியால் தான் பொது இடத்தில் பட்ட அவமானத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.
மலையாள நடிகையான அபர்ணா முரளி, தமிழில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து, ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக சர்வம் தாளமயம் படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளிக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது சூரரைப் போற்று திரைப்படம் தான். சுதா கொங்கரா இயக்கிய அப்படத்தில் பொம்மி என்கிற கதாபாத்திரத்தில் மதுரைக்கார பெண்ணாகவே நடித்திருந்தார். சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றார். அவர் வாங்கிய முதல் தேசிய விருது இதுவாகும். மேலும் அப்படத்திற்காக ஃபிலிம்ஃபேர், சைமா விருது என பல விருதுகளை வென்றார்.

அபர்ணா பாலமுரளி: சூரரைப் போற்று படத்திற்கு பின்னர் நடிகை அபர்ணா பாலமுரளிக்கு தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், குறிப்பிட்ட படங்களை மட்டுமே அவர் தேர்வு செய்து நடித்து வருகிறார். குறிப்பாக நித்தம் ஒரு வானம், ராயன் போன்ற படங்களில் மட்டும் தான் அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். ராயன் படத்தில் குறிப்பிட்ட காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், அந்த படத்தில் ஒரு பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம், அபர்ணாவை மேலும் பிரபலமாக்கியது. தொடர்ந்து மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் அபர்ணா பாலமுரளி, தனது தனிப்பட்ட வாழ்க்கையில், உடல் எடையால், ஒரு பொது நிகழ்ச்சியில் சந்தித்த அவமானத்தை வேதனையுடன் வெளிப்படுத்தி உள்ளார்.
மனவேதனை: அதில், ஒரு பொது இடத்தில், அறிமுகமில்லாத ஒருவர் என்னிடம் வந்து, 'என்ன அபர்ணா, மிகவும் குண்டாகிவிட்டீர்கள். நன்றாகச் சாப்பிடுவீங்க போல' என்று கூறினார்" அந்த நபர் அப்படி சொன்னதும் நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். அப்போது, அந்த நபரிடம், என் எடை கூடிவிட்டது என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம். இது போன்ற தனிப்பட்ட விமர்சனங்கள் பற்றி நீங்கள் எதுவும் பேசக்கூடாது என்றேன். மேலும், பொது இடங்களில் யாருடைய உடல் தோற்றம் குறித்து இத்தகைய கருத்துகளைச் சொல்வது தவறானது என்றேன். இந்த சம்பவம் நடந்த பல மாதங்களாகி விட்டது. ஆனால், அது என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. உரிமையோடு பேசுகிறேன் என்று பலரும் இப்படித்தான்,தேவை இல்லாத விஷயத்தை பேசி வருகிறார்கள் என்று அபர்ணா பாலமுரளி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











