கமலுடன் நடிப்பது சவால் - ஆசின்
கமல்ஹாசன் போன்ற மிகப் பெரிய நடிகருடன் நடிப்பது சவாலான விஷயம் என்று ஆசின் பெருமை பொங்கக் கூறுகிறார்.
இன்னும் தசாவதார படப் பாதிப்பிலிருந்து ஆசின் முழுமையாக நீங்கவில்லையாம். தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே தந்து கொண்டிருக்கும் ஆசின் இப்போது பிராந்திய நடிகை என்ற அந்தஸ்திலிருந்து விடுபட்டு தேசிய நடிகையாகியுள்ளார்.இந்தி கஜினியில் அமீர்கானுடன் அசத்தலாக நடித்து வரும் ஆசின், கமல் பெருமை பெற்றி போகிற இடமெல்லாம் பேசுகிறாராம்.
கமல் சார் எவ்வளவு பெரிய நடிகர். அவருடன் நடிப்பது பெரிய சவாலான விஷயம். அவர் மேக்கப் போடவே பல மணி நேரம் பிடிக்கிறது. மேக்கப் போட்டு விட்டு வெளியே வந்தால் ஆளே சுத்தமாக மாறிப் போயிருக்கிறார். அத்தனை கன கச்சிதமாக மேக்கப் பொருந்திப் போகிறது.
அவருடன் நடிக்கும் காட்சி என்றாலே எனக்கு பயம் வந்து விடும். பயந்து கொண்டேதான் அந்தக் காட்சிகளில் நடிப்பேன். அந்த அளவுக்குத் திறமையான நடிகர். அதேபோல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும். இவர்களுடைய படத்தில் நான் நடிக்கிறேன் என்பதையே என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.
பதட்டத்தில் அதிக டேக்குகள் வாங்கி விடுகிறேன். வீட்டில் இருந்து தசாவதாரம் ஷூட்டிங்கிற்கு கிளம்பும் வரை ஒரு பிரச்சினையும் இருக்காது. ஆனால் செட்டுக்குள் நுழைந்ததும் பதட்டமாகி விடுகிறது.
கமல் சார் குறித்தும், கே.எஸ்.ரவிக்குமார் சார் குறித்தும் நிறைய செய்திகளைப் படித்துள்ளேன். ஆனால் இப்போது அவர்களுடைய படத்தில் நான் நடிப்பது குறித்துப் பேச வார்த்தைகளே இல்லை என்று வியப்புடன் கூறுகிறார் ஆசின்.
அதேபோல இந்தி சினிமாவில் நடிப்பதும் பெருமையாக இருக்கிறதாம் ஆசினுக்கு. ஸ்ரீதேவிக்குப் பிறகு இந்திக்குப் போன முதல் நடிகை நான் தான் என்று பெருமை பொங்கச் சொல்கிறார் ஆசின்.
பொங்கட்டும், பொங்கட்டும்!


Click it and Unblock the Notifications











