திருமணத்தை நம்புகிறேன், அதற்கு எனக்கு ஏற்ற ஒருவரை நான் சந்திக்க வேண்டும்- த்ரிஷா
சென்னை: திருமணத்தின் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது ஆனால் அதற்கு எனக்கு ஏற்ற ஒருவரை நான் சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் நடிகை த்ரிஷா.
சமீபத்தில் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும், த்ரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத் தேதியும் குறிக்கப்பட்ட நிலையில் அந்த திருமணம் திடீரென நின்று போனது.இடையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் இந்த விஷயத்தில் மனம் உடைந்து போகாமல், தனது அடுத்த வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார் நடிகை த்ரிஷா. பேட்டி ஒன்றில் தனதுஇப்போதைய நிலையை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் நடிகை.
அவர் கூறியவற்றை இங்கு காணலாம்.

சிம்ரனின் தோழியாக
ஜோடி படத்தில் நடிகை சிம்ரனின் தோழியாக ஒரே ஒரு சீனில் தலை காட்டிச் சென்ற த்ரிஷா, நாயகியாக நடிக்க ஆரம்பித்து 13 வருடங்கள் கடந்த நிலையிலும் இன்றும் தமிழின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

மௌனம் பேசியதே முதல் தூங்காவனம் வரை
2002 ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் ஜோடியாக மவுனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான த்ரிஷா இந்த 13 ஆண்டுகளில் சுமார் 50 படங்கள் வரை நடித்து இருக்கிறார்.இன்றும் தமிழின் முன்னணி நடிகையாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு சினிமா
தெலுங்கு தேசத்திலும் நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெயர் த்ரிஷாவுக்கு உண்டு. இவர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படங்கள் பலவும் தெலுங்கு தேசத்தில் ஹிட்டடித்து உள்ளது.

ராணாவுடன்
முதலில் தெலுங்கு நடிகரும் சிறுவயது நண்பருமான ராணாவுடன் காதல் என்று செய்திகள் வந்தன. இருவரைப் பற்றியும் எழுதாத தமிழ், தெலுங்குப் பத்திரிக்கைகளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு இருவரின் காதல் உலகப் பிரசித்தி பெற்றது. ஆனால் என்ன காரணத்தினாலோ இந்தக் காதல் ஒரு நாள் முடிவுக்கு வந்ததில், இருவரும் பிரிந்தனர்.

வருண்மணியன் – த்ரிஷா
தமிழ்ப் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் எல்லாம் முடிந்து, கல்யாணத்திற்கு மிகவும் குறுகிய நாட்களே இருந்த நிலையில் இருவரின் திருமணமும் நின்று விட்டது. என்ன காரணம் என்று இன்றுவரை தெளிவான தகவல் எதுவும் இல்லை.

பிரிவிற்கான காரணம் என்ன
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை த்ரிஷா இவ்வாறு கூறியிருக்கிறார், "எனது திருமணம் முடிவுக்கு வர ஆயிரம் காரணங்கள் உள்ளன. அவற்றை நான் எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை, ஏன் அம்மா ஒருவருக்கு மட்டும் நான் பதிலளித்தால் போதுமானது. இன்று நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் கடந்த காலத்தைப் பற்றி நினைவு கொள்ள விரும்பவில்லை.

நான் எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்வேன்
திருமணம் முறிந்து போனது குறித்து கவலைப் படாமல் அடுத்த வேலைகளில் கவனம் செலுத்த விரும்புகிறேன், ஏனெனில் எல்லாவற்றையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவள் நான் எனது கவனம் முழுவதும் தற்போது அடுத்தடுத்த படங்களின் மீது தான் உள்ளது.

திருமணத்தின் மீது நம்பிக்கை உள்ளது
எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை உள்ளது ஆனால், சமுதாயத்திற்காக திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. உண்மையைச் சொன்னால் திருமணத்திற்கு வயது ஒரு காரணமே இல்லை, சமுதாயத்திற்காக திருமணம் செய்து கொள்பவர்கள் திருமணத்திற்குப் பின் நிறையக் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர். ஒருவரின் மீது அன்பு கொண்டு செய்யும் திருமணமே சிறந்தது என்பதை உணர வேண்டும். எனக்கு ஏற்ற ஒருவரை இப்போது சந்தித்தால் கூட திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன்' என்று திருமணம் பற்றி கூறியிருக்கிறார் நடிகை திரிஷா.


Click it and Unblock the Notifications











