'சாமியாரிணி'க்கு குஷ்பு ஸாரி!
சத்யராஜ் சாமியாராக நடிக்கும் படத்தில் பெண் சாமியார் வேடத்தில் நடிக்க கூப்பிட்ட அழைப்பை குஷ்பு நிராகரித்து விட்டாராம்.
கற்பு குறித்துப் பேசப் போய் தமிழகம் முழுவதும் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டார் குஷ்பு. இந்த சர்ச்சையிலிருந்து மீள்வதற்குள் அவருக்குப் போதும் போதும் என்றாகி விட்டது.
இந்த நிலையில் அவர் பெரியார் படத்தில் மணியம்மை வேடத்தில் நடிக்க முடிவானபோது அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. கற்பு குறித்து பேசிய குஷ்பு, மணியம்மமை வேடத்தில் நடிப்பதா என்று பலரும் எதிர்ப்புக் கொடி பிடித்தனர்.
இருந்தாலும் சத்யராஜ் மற்றும் இயக்குநர் ஞானராஜசேகரன் ஆகியோர் பிடிவாதமாக இருந்து குஷ்புவை அந்த வேடத்தில் நடிக்க வைத்தனர். ஆனாலும், குஷ்புவால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டவரான படத்தின் ஒளிப்பதிவாளரான இயக்குநர் தங்கர் பச்சான், குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை வேடம் குஷ்புவைத் தேடி வந்துள்ளது. ஆனால் அவர் சுதாரித்துக் கொண்டு வேண்டாம் என்று கூறி விட்டாராம்.
லொள்ளு நாயகன் சத்யராஜ் பிரபலமான சாமியார் கேரக்டரில் சாமியார் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் பெண் சாமியார் கேரக்டரும் உண்டாம். இந்த வேடத்தில் நடிக்கத்தான் குஷ்புவைக் கூப்பிட்டுள்ளனர். சத்யராஜே தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தாராம்.
ஆனால் ஏற்கனவே நடந்த களேபரங்கள் ஃபிளாஷ் போல குஷ்பு மனதில் ஒரு சில விநாடிகள் ஓடி கிலியைக் கொடுத்ததாம். இதையடுத்து ஏற்கனவே பட்ட சர்ச்சைகள் போதும், இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன், இந்த சமயத்தில் புது சர்ச்சை வேண்டாமே என்று கூறி சாமியாரிணியாக நடிக்க மறுத்து விட்டாராம்.
இதனால் வேறு பெண் 'சாமியாரைத்' தேடிக் கொண்டிருக்கிறார்களாம்!


Click it and Unblock the Notifications











