இந்தியாவில் 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் மீது பாலியல் வன்முறை -ஐநாவில் மல்லிகா ஷெராவத் பேச்சு!
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத், "இந்தியாவில் 20 நிமிட இடைவெளியில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றாள். இதனை பெண்கள் மட்டுமே தடுக்க முடியாது. ஆண்களும் ஒத்துழைத்தால் இக்கொடுமைக்கு தீர்வு காண முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது தகவல் துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது.
அதில், வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், கல்வியறிவு போன்றவற்றை மேம்படுத்துவது குறித்து இந்தியா சார்பில் சில பிரபலங்கள் துறைவாரியாக பங்கேற்று உரையாற்றினர்.

ஐநாவில் மல்லிகா:
அந்தவகையில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் என்ற ரீதியில், மல்லிகா ஷெராவத்தும் அந்த கருத்தரங்கில் பங்கேற்றார்.

அதிகரிக்கும் பெண் வன்கொடுமைகள்:
அப்போது உரையாற்றிய அவர், "இந்தியாவில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வகையில் உள்ளது. இதை தடுக்க அரசும், நீதித்துறையும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்ட பிறகும் இந்த கொடூர சம்பவங்கள் குறைந்த பாடில்லை.

பாலியல் வன்முறைகள்:
20 நிமிடத்திற்கு ஒரு முறை, ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அவலம் இந்தியாவில் நடைபெறுகிறது. இதை கடுமையான சட்டங்களால் மட்டும் தடுக்க முடியாது.

ஆண்களின் பங்களிப்பு தேவை:
பலாத்காரத்திற்கு எதிராக ஆண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தால் தான் தடுக்க முடியும். ஜாதி பிரச்னை, ஆணாதிக்க சமுதாயம் போன்றவை யும் இந்த கொடுமைக்கு காரணங்களாக அமைந்துள்ளன.

குழந்தை திருமணங்கள் அதிகம்:
குழந்தை திருமணங்களும் அதிக அளவில் இந்தியாவில் நடைபெறுகிறது.ஏராளமானோர் கல்வியறிவு பெற்ற போதிலும், பல்வேறு காரணங்களால் குழந்தைகள் திருமணம் நடைபெறுகிறது.

முயற்சிகள் அவசியம்:
இதை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனை தடுப்பதற்கான முயற்சிகளும் கண்டிப்பாக தேவை" என்று அவர் உரையாற்றினார்.


Click it and Unblock the Notifications











