நான் ‘ஜோ’வின் தீவிர ரசிகையாக்கும்... "ஜில்"லுன்னு பேசும் நந்திதா
சென்னை: தான் ஜோதிகாவின் தீவிர ரசிகை என்றும், அவரைப் பார்த்து தான் நடிகையானதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை நந்திதா.
அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. அதனைத் தொடர்ந்து ‘எதிர்நீச்சல்', ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', ‘முண்டாசுப்பட்டி' போன்ற படங்களில் நடித்து திறமையான நடிகை என பெயரெடுத்துள்ளார்.
இந்நிலையில், ராதா மோகன் இயக்கத்தில் கருணாகரன் ஜோடியாக நந்திதா நடித்துள்ள உப்புக் கருவாடு பட டீசர் நேற்று வெளியிடப் பட்டது. நடிகை ஜோதிகா இதனை இணையதளம் மூலமாக வெளியிட்டார்.

தீவிர ரசிகை...
இது தொடர்பாக நந்திதா கூறுகையில், ‘நான் ஜோதிகாவின் தீவிர ரசிகை. அவரை பார்த்துதான் நானும் நடிகையானேன்.

ஹேப்பீ... ஹேப்பீ
ஜோதிகா எனது படத்தின் டிரெய்லரை வெளியிட்டது மகிழ்ச்சியளிக்கிறது. டிரெய்லர் வெளியிட்டு நிகழ்ச்சியில் அவரை சந்தித்தபோது பரபரப்பாய் இருந்தேன்.

வியப்பு...
ஜோதிகா எங்களை வரவேற்ற விதமும், பேசிய விதமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. என்னைப் பற்றியும் எனது படங்களை பற்றியும் பாராட்டி பேசியதை என்னால் மறக்கவே முடியாது. குறிப்பாக ‘உப்பு கருவாடு' படத்தை மிகவும் பாராட்டினார்.

ராதா மோகன் படங்கள்...
‘அபியும் நானும்', ‘மொழி' படங்களில் இருந்த முதன்மை பெண் கதாபாத்திரங்களை யாரும் மறக்க முடியாது. எத்தகைய கதாபாத்திரங்களை உருவாக்கிய இயக்குனர் ராதாமோகனின் ‘உப்பு கருவாடு' படத்தில் பணிபுரியும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்ற உணர்வோடு இந்த படத்தில் நடித்து இருக்கிறேன்' என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

புலி...
இப்படம் தவிர நந்திதா தற்போது ‘இடம் பொருள் ஏவல்', ‘உப்பு கருவாடு', ‘புலி' ஆகிய படங்களிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உப்புக் கருவாடு...
உப்புக் கருவாடு படம் குறித்து நடிகை ஜோதிகா பேசும்போது, ‘ராதாமோகனுக்கு ‘மொழி' போல் ‘உப்பு கருவாடு' படமும் முக்கிய படமாக அமையும். இந்த படத்தில் நந்திதா நடித்து இருப்பது போன்ற கதாபாத்திரம் எந்த கால கட்டத்திலும் எல்லா கதாநாயகிகளுக்கும் கிடைப்பது இல்லை' என்றார்.


Click it and Unblock the Notifications











