தமிழில் இசைக் கச்சேரி நடத்த ஆசைப்படும் ரம்யா நம்பீசன்
பின்னணி பாடுவதில் அதிக அக்கறை காட்டி வரும் நடிகை ரம்யா நம்பீசன், அடுத்து தமிழில் ஒரு லைவ் கச்சேரி செய்ய விரும்புகிறார். இதை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் சொல்லவும் தவறுவதில்லை அவர்.
மலையாளத்தில் கைவசம் நிறையப் படங்களை வைத்திருக்கிறார். பாடல்களும் பாடி வருகிறார்.

நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்
தமிழில் இப்போது அருள் நிதியுடன் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தில் நடிக்கிறார். ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
இப்படத்தை ஜே.எஸ்.கே.சதீஷ் உடன் லியோ விஷன்ஸ் மற்றும் செவன்ஜி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

நகைச்சுவை வேடம்
இப்படத்தில் ரம்யா நம்பீசன் பள்ளி ஆசிரியையாக நடிக்கிறாராம். படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், "நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்' படத்தில் நான் ஒரு பள்ளி ஆசிரியையாக வருகிறேன். ‘குள்ளநரிக் கூட்டம்' படத்துக்கு பிறகு எனக்கு கிராமத்து சாயலில் ஒரு கதாபாத்திரம் அமைந்துள்ளது.
இந்த மாதிரியான நகைச்சுவை படங்களில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக காத்திருந்தேன். ஸ்ரீகிருஷ்ணா இந்தை கதையை கூறியதும் சற்றும் யோசிக்காமல் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

அருள்நிதியுடன் நடிக்க பயம்
அருள்நிதியுடன் நடிக்க ஆரம்பத்தில் பயமாக இருந்தது. பெரிய சினிமா பின்புலம் கொண்ட நடிகர் என்றாலும், அவர் அனைவரிடமும் கனிவாக நடந்து கொண்டார். இன்னமும் எனக்கு தமிழில் உச்சரிப்பு கொஞ்சம் தடுமாற்றம்தான். அப்போதெல்லாம் அருள்நிதிதான் உதவினார்," என்றவரிடம், அவரது இசை ஆர்வம், அனுபவம் குறித்துக் கேட்டோம்.

தமிழில் கச்சேரி
"இப்படத்தில் நான் எந்த பாடலும் பாடவில்லை. இருந்தாலும் காதல் கனிரசம் என்று தொடங்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. மலையாளத்தில் இரண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். தமிழில் இசை நிகழ்ச்சிகள் செய்ய ஆர்வம் உள்ளது. நேரம் கூடினால் கண்டிப்பாக செய்வேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











