'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை செல்வராகவனின் கண்கள் வழியாகப் பார்க்க ஆசை - ரெஜினா
சென்னை: தமிழில் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா'வைத் தவிர ரெஜினாவிற்கு வேறு எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக ரெஜினா நடித்திருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவுக்கு வந்தது.
செல்வராகவன் இவ்வளவு சீக்கிரம் ஒரு படத்தை முடித்து விட்டாரா? என்று கோலிவுட்டினர் ஆச்சரியத்தில் மூழ்க, செல்வராகவன் ஒரு சூப்பர் இயக்குநர் என்று அவருக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் ரெஜினா.
'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தில் தன்னுடைய கதாபாத்திரம், செல்வராகவனின் இயக்கம், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ஆகியவை குறித்து ரெஜினா பகிர்ந்து கொண்டவற்றை இங்கே காண்போம்.

செல்வராகவன்
''செல்வா சார் படத்தில் ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார். அவரின் நாயகிகள் எப்போதும் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். நாயகன் குறித்த தனி மனித வழிபாடு அவரின் படத்தில் இருக்காது.

ஷூட்டிங்
அவரின் படங்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் என்பதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு காட்சியை அவர் எப்படி படம் பிடிப்பார் என்பதை நம்மால் எப்போதுமே கணிக்க முடியாது. சொல்லப் போனால் 'நெஞ்சம் மறப்பதில்லை' என்னும் திகில் படத்தை அவரின் கண்கள் வழியாகப் பார்க்க, நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மரியம்
இப்படத்தில் ஒரு பணக்கார வீட்டின் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் மரியம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதாபாத்திரத்தை சிக்கல் நிறைந்ததாக வடிவமைத்துள்ளனர்.

ஜெபமாலை
என் கழுத்தில் ஜெபமாலை கிடப்பது போல வெளியான பர்ஸ்ட் லுக்கே என் கதாபத்திரத்தைக் கூறிவிடும். கடவுள் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பெண்ணாக, இப்படத்தில் நான் வருகிறேன். இப்படத்தில் நான் ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறேன் என்றாலும், என்னைவிட நந்திதாவிற்கே ஆக்ஷன் காட்சிகள் அதிகம். குறிப்பாக எஸ்.ஜே.சூர்யா-நந்திதா இடையிலான சண்டைக்காட்சி நிச்சயம் ரசிகர்களைக் கவரும்'' என்றார்.
'நெஞ்சம் மறப்பதில்லை' ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











