அதிக சம்பளம் வாங்குவதில் தவறில்லை - சமந்தா
அதிக சம்பளம் வாங்குவதாக என்னைக் குறை சொல்வது பற்றி கவலையில்லை. மார்க்கெட் இருப்பதால் அதிக சம்பளம் வாங்குகிறேன். இதில் ஒரு தவறுமில்லை, என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாகத் திகழும் சமந்தா, இப்போது கோடிகளில் சம்பளம் பெறுகிறார். அவர் நடித்த சமீபத்திய படங்கள் சரியாகப் போகாவிட்டாலும், சம்பளத்தை மட்டும் குறைக்கவே இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஹீரோக்களுக்குதான்...
இதுகுறித்து அவர் கூறுகையில், "திரைப்படங்களில் கதாநாயகர்களுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்களை சுற்றிதான் கதையும் பின்னப்படுகிறது. கதாநாயகிகளும் முக்கியமானவர்கள்தான். எங்களுக்கும் தனிப்பட்ட கூட்டம் இருக்கிறது.

குறைத்து மதிப்பிட வேண்டாம்
கதாநாயகர்களை பார்ப்பதற்காக தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருவதைபோல் கதாநாயகிகளை பார்க்கவும் வருகிறார்கள். எங்களையும் ரசிக்கிறார்கள். எனவே நடிகைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

தவறல்ல
கதாநாயகிகள் சம்பளம் அதிகம் வாங்குவதையும் விமர்சிக்கிறார்கள். அதிக சம்பளம் வாங்குவது தவறல்ல. மார்க்கெட் இருப்பதால்தான் தருகிறார்கள். இல்லாவிட்டால் சம்பளத்தை குறைத்து விடுவார்கள். எனவே மார்க்கெட் இருக்கும்போது சம்பளத்தை கூட்டி கேட்பது நியாயமானதுதான்.

பணம் மட்டுமே நோக்கமல்ல
பணம் மட்டும்தான் என் குறிக்கோள் என்றும் யாரும் கருதிவிட வேண்டாம். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் அமைந்தால் சம்பளம் வாங்காமல் நடிக்கவும் தயாராக இருக்கிறேன்.

உள்ளாடை விளம்பரத்தில் நடிக்கவில்லை
உள்ளாடை விளம்பர படத்தில் நடிக்க போவதாக செய்திகள் பரவி வருகின்றன. அப்படி எந்த படத்திலும் நான் நடிக்கவில்லை. அது தவறான தகவல்," என்றார்.


Click it and Unblock the Notifications











