வருமான வரி வழக்கு-விஜயசாந்திக்கு நோட்டீஸ்
வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 3ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நடிகை விஜயசாந்திக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத் தடுப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தெலுங்கிலும், தமிழிலிலும் பிரபலமாக இருந்தவர் விஜயசாந்தி. நடிப்பு வாய்ப்பு மங்கத் தொடங்கியபோது தலி தெலுங்கானா என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜயசாந்தி. இப்போது தனி தெலுங்கானா மாநிலத்திற்கான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விஜயசாந்தி மீது வழக்கு தொடர்ந்தது.
2002-03, 2003-04ம் ஆண்டுகளுக்குரிய வருமான வரிக் கணக்கை விஜயசாந்தி தாக்கல் செய்யவில்லை. இதையடுத்தே இந்த வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி விஜயசாந்தி நேரில் ஆஜராகவில்லை.
நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிரேம்குமார் முன்பு ஆஜரான விஜயசாந்தியின் வக்கீல் விஜயசாந்தியால் நேரில் வர முடியவில்லை என்று சில காரணங்களைக் கூறினார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி கண்டிப்பாக விஜயசாந்தி ஆஜராக வேண்டும் என்று கூறி விசாரணையை அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தார்.


Click it and Unblock the Notifications











