வயிற்றில் குழந்தையுடன் ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் ஆலியா பட்.. ரன்பீர் கபூர் ஐடியா என்ன?
மும்பை: பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் இந்த ஆண்டு துவக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வரும் ஆலியா பட் ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனாலும், தொடர்ந்து அவர் சினிமாவில் நடித்து வருவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

காதல் திருமணம்
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம், ஹனிமூன் எல்லாம் முடிந்த கையோடு இருவரும் படங்களில் நடிக்க பிசியாகினர். ரன்பீர் கபூர் தனது நடிப்பில் உருவாகி உள்ள ஷம்ஷீரா படத்தின் புரமோஷனை செய்து வருகிறார். ஆலியா பட், ரன்பீர் கபூர் இருவரும் இணைந்து நடித்த பிரம்மாஸ்த்திரம் படத்தின் புரமோஷன் பணிகளையும் இருவரும் சேர்ந்து செய்து வருகின்றனர்.

தள்ளிப் போடல
பொதுவாக நடிகர்கள் திருமணம் செய்து கொண்டாலும், உடனடியாக குழந்தையை பெற்றுக் கொள்ளாமல் சில ஆண்டுகள் கழித்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவு செய்வார்கள். ஆனால், சமீபத்தில் திருமணமான நடிகை காஜல் அகர்வால், பிரணிதா உள்ளிட்டோர் குழந்தையை உடனடியாக பெற்றுக் கொண்டதை போலவே ஆலியா பட்டும் இப்போது அம்மாவாகி உள்ளார் என்கிற இனிப்பான செய்தியை அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியிட்டனர்.

ஹாலிவுட் படம்
தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஹுமா குரேஷியை தொடர்ந்து பாலிவுட்டில் இருந்து நடிகை ஆலியா பட்டும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். ஹார்ட் ஆஃப் ஸ்டோன் இன் லண்டன் எனும் படத்தில் நடித்து வரும் ஆலியா பட், வயிற்றில் கருவை சுமந்து கொண்டே அந்த படத்தின் படப்பிடிப்புகளிலும் பங்கேற்று வருவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரெஸ்ட் எடுக்கல
குறிப்பாக இதுபோன்ற நேரங்களில் பிரபலமான பெண்கள் எந்த வேலைக்கும் செல்லாமல், வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுத்து தங்களது ஆரோக்கியம் மற்றும் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பேணி காத்து வருவார்கள். ஆனால், வேலைக்கு செல்லும் பெண்கள் 6 முதல் 7 மாத நிறைமாத வயிற்றுடனே பல இடங்களில் பணியாற்றி வருவது போல தற்போது ஆலியா பட்டும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்புகளில் ரிஸ்க் எடுத்து கலந்து கொண்டு வருகிறார் என ரன்பீர் கபூரே கூறியுள்ளார்.

கனவை கெடுக்க மாட்டேன்
ஆலியா பட் பிசியான நடிகை என்பது எனக்குத் தெரியும். அவரது கனவை நான் ஒரு போதும் கெடுக்க மாட்டேன். குழந்தை மற்றும் குடும்பத்தை பார்த்துக் கொள்வதற்காக அவரது நடிப்புத் திறமையை விட்டு விட முடியாது. சொந்த வாழ்க்கையையும் நடிப்புத் தொழிலையும் எப்படி பேலன்ஸ் செய்து பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லலாம் என்பதை இருவரும் திட்டமிட்டு செய்து வருகிறோம் என ஷம்ஷீரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர் நெகிழ்ந்து பேசி உள்ளார். வரும் ஜூலை 22ம் தேதி பான் இந்தியா படமாக ஷம்ஷீரா வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











