தி.மு.க எம்.பி கனிமொழி தான் எனக்கு ரோல் மாடல்... ஏன்,எதற்கு என்ற காரணத்தை சொன்ன நடிகை ஹனி ரோஸ்
சென்னை: பட்டாம்பூச்சி படத்தில் நடித்த நடிகை ஹனிரோஸ் பல ஆண்டுகளாக பல மொழிகளில் தன் நடிப்பாற்றலை வெளிபடுத்தி வருகிறார்.
இயக்குநரும், நடிகருமாகிய சுந்தர். சி, நடிகர் ஜெய் ஆகியோரது நடிப்பில் இயக்குநர் பத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகை ஹனிரோஸ் நமது பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

15 வருடங்கள் நிறைவு
கேள்வி: ஹனிரோஸ் உங்களுடைய திரைப்பயணம் குறித்து...
பதில்: நான் 7ம் வகுப்புக்கு படித்துக் கொண்டிருக்கும்போது சினிமாத்துறைக்கு வந்தேன். கிட்டத்தட்ட 15 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. ஐந்து வருடங்களுக்கு பிறகு, தமிழில் நான் நடிக்கும் படம் பட்டாம் பூச்சி. இப்படத்தில் விஜயலட்சுமி என்கிற விஜி கதாபாத்திரத்தில் பெண் பத்திரிக்கை நிருபராக நடித்துள்ளேன் என்றார்.

மேக்கப் இல்லை
கேள்வி: பட்டாம்பூச்சி கதையில் நீங்கள் நடிக்க காரணம் என்ன?
பதில்: பட்டாம்பூச்சி கதை குறித்து இயக்குநர் பத்ரி கூறும்போது, கதை, கதாபாத்திரம் என அனைத்தும் எனக்கு பிடித்து விட்டது. 1989ல் பத்திரிக்கையாளருக்கு என்னென்ன பிரச்னைகள் வரும், அவற்றை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்று எதார்த்தமான கதையை கூறினார். இயக்குநரின் பார்வை தெளிவாக இருந்தது. மேக்கப் கிடையாது, என்ன மாதிரியான காஸ்ட்யூம் என்பதையெல்லாம் கூறினார். வழக்கமான கதாநாயகிக்கு இருக்கும் பாடல், ரொமான்ஸ் இல்லாமல் எதார்த்தமான படமாக அமைந்தது சந்தோஷம். நானும் 1989ல் நடைபெறுகின்ற கதை தானே, எளிதாக செய்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால் நடந்தது எல்லாம் வேறு. சொல்வதெல்லாம் எளிது. ஆனால் அதை செயல்படுத்தும்பொழுது கஷ்டம் என்பதை படப்பிடிப்பிற்கு வந்தவுடன் புரிந்து கொண்டேன். சொல்லப்போனால் இப்படத்தில் சி.ஜி.( computer graphics ) வேலைக்கு மட்டும் ரொம்ப நாள் தேவைப்பட்டது. ஏனென்றால் அக்காலக்கட்டத்தில் இந்தளவுக்கு பில்டிங் எல்லாம் கிடையாது. படப்பிடிப்பை முடித்து விட்டு அவற்றையெல்லாம் நீக்குவதற்கு சிரமப்பட்டார்கள் .

அடுத்து நாட்டிற்கே ஓடி...
கேள்வி: உங்களுக்கு பிடித்த வசனம் எது?
பதில்: அனைத்து வசனங்களும் எனக்கு பிடிக்கும். ஒரு பத்திரிகை நிருபருக்கு என்னென்ன வசனங்கள் தேவையோ, அது மட்டுமே இருக்கும். தேவையில்லாமல் எந்த இடத்திலும் வசனங்கள் இடம்பெறாது. அனைத்தும் அருமையாக இருக்கும் .
கேள்வி: நடிகர் ஜெய் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: நடிகர் ஜெய் பொதுவாக ஒரு சாக்லேட் பையன் மாதிரி இருப்பார். ஆனால் பட்டாம்பூச்சி படத்தில் அதற்கு நேர்மாறாக நடித்திருப்பார். இன்னும் சொல்லப்போனால் அவர் என்கிட்ட வரும்போது, தயவு செய்து வராதீர்கள். எனக்கு பயமாக இருக்கிறது என்பேன். ஏனென்றால் கதையில் அடுத்த என்ன வரப்போகிறது என்பது நமக்கு தெரியும். நான் ஜெய்க்கு பயந்து ஓடியதை, எத்தனை முறை என்று நான் கணக்கு பார்க்கவில்லை. என்னை தொடர்ந்து ஜெய் துரத்தி துரத்தி எடுக்க பட்ட காட்சிகள், விட்டிருந்தால் அடுத்து நாட்டிற்கே ஓடியிருப்பேன் என்று சிரித்த படி ஹனி ரோஸ் பதில் அளித்தார். மேலும் கூறுகையில்... தனக்கு ஆறுதலான விஷயம் என்னவென்றால் நடிகர் சுந்தர்.சி உடன் நடிக்கும்போது மட்டுமே பாசிட்டிவ்வாக இருக்கும். மேலும் இமான் அண்ணாச்சி, மற்றும் எனது குழந்தையுடன் நடிக்கும்போது இயல்பாக காணப்படுவேன் என்றார்.

மூன்று வாரங்கள் கஷ்டப்பட்டேன்
கேள்வி: படப்பிடிப்பின்போது உங்களுக்கு காயங்கள் ஏற்பட்டதா?
பதில்: இப்படத்தில் நடிக்கும்போது எனக்கு காயங்கள் ஏற்பட்டது. மனதளவில் கஷ்டப்பட்டாலும் விரைவில் இயல்பு நிலைக்கு வந்து விட முடிந்தது. ஆனால் உடலளவில் மிகவும் கஷ்டப்பட்டேன். இன்னும் சொல்லப்போனால் படப்பிடிப்பு முடித்து விட்டு, வீட்டிற்கு செல்லும்போது படத்தில் தானே நடித்து விட்டு வருகிறாயா? என்று நக்கலாக நிறைய பேர் கேட்டார்கள். அந்தளவுக்கு எனது உடம்பில் போடப்பட்ட ப்ளூ கலர் மார்க். அதை நீக்குவதற்கு மட்டும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் கஷ்டப்பட்டேன் என்றார் ஹனி ரோஸ்.

எனது ரோல்மாடல் கனிமொழி எம்.பி.
கேள்வி: பெண் பத்திரிகை நிருபராக யாரை ரோல்மாடாக தேர்ந்தெடுத்தீர்கள்?
பதில்: 1989ல் பெண் பத்திரிக்கை நிருபர்கள் எப்படியிருப்பார்கள் என்பதை கூகுளில் தேடிப்பார்த்தேன். அப்போது நான் தேர்வு செய்தது தற்போதைய திமுக எம்.பி.,யும், அப்போதைய பத்திரிகை நிருபருமாகிய கனிமொழியை தான். அவர் சேலை கட்டும் விதம், பொட்டு வைத்தல் போன்றவற்றையெல்லாம் ரோல் மாடலாக நான் வைத்துக் கொண்டேன் . அவர் தான் எனக்கு ஒரு சிறந்த உதாரணம்.

ரொம்ப அமைதியானவர்
கேள்வி: இயக்குனர் பத்ரி மற்றும் கேமராமேன் குறித்து நீங்கள் கூற விரும்புவது?
பதில்: கேமராமேனை பொறுத்தவரை ரொம்ப அமைதியானவர். நான் அவரிடம் பேசியது ரொம்ப குறைவு. ஆனால் இனிமையானவர். ஆனால் இயக்குநர் பத்ரி டென்ஷனாகவே இருப்பார். நாம் என்னதான் நடித்தாலும், பத்தல... பத்தல.. இன்னும் வேணும்... இரத்தமா... பத்தல.. இன்னும் வேணும் என்பார். மேக்கப் இன்னும்மா போடுறீங்க.... சீக்கிரம் என்பார்... உண்மையை சொல்லவேண்டுமென்றால், இயக்குநர் பத்ரிக்குள்ளே ஒரு சைக்கோ கேரக்டர் இருக்கு என்று குலுங்கி குலுங்கி சிரித்து, பட்டாம்பூச்சி இயக்குநர் பத்ரியை கிண்டல் செய்தார் ஹனி ரோஸ்.
நான் டப்பிங் பேசவில்லை
கேள்வி: என்ன காரணத்திற்காக இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க வேண்டும்?
பதில்: என்னை பொறுத்தவரை இப்படம் தான் எனக்கு மிகப்பெரிய சைக்கோ த்ரில்லர் படம். இதுவரைக்கு இந்த மாதிரியான படங்களை நான் பார்த்ததில்லை. இந்த படத்தை நன்றாக ரசிக்க முடியும் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், தனக்கு பிடித்தமான கலர் கறுப்பு என்றும், தான் பட்டாம்பூச்சி படத்தில் டப்பிங் பேசவில்லை, பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சவீதா தான் டப்பிங் பேசியுள்ளார் என்றும் தெரிவித்தார். தமிழ் பேசுவேன். ஆனால் தமிழ் பேசி நடிக்கும்பொழுது, தவறு செய்து விடுமோ என்ற பயத்தில் நடிப்பில் கோட்டையை விடக்கூடாது என்பதற்காக முழுவதும் நடிப்பில் கவனம் செலுத்தியுள்ளேன் என்றார் ஹனி ரோஸ்.
மேலும் அவர் கூறுகையில், நடிகர் மோகன்லால் தயாரிக்கும் மான்ஸ்ட்ர் படத்தில் பாமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், அந்த படத்திலும் பட்டாம்பூச்சி விஜயலட்சுமி போன்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=Z-LuytU5Vsw இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். நடிகை ஹனிரோஸ் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











