பாக்ஸ் ஆபீஸ் டிராகன்.. ‘டியூட்’ பிரதீப் ரங்கநாதனுக்கு முதல் வாய்ப்பு கிடைக்க யார் காரணம் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவின் புதிய பாக்ஸ் ஆபீஸ் டிராகனாகவே மாறிவிட்டார் நம்ம டியூட் பிரதீப் ரங்கநாதன். ஆரம்பத்தில் சோஷியல் மீடியாவில் சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் பிரபலங்கள் என பலரையும் கேலி செய்து ஆபாசமாக கமெண்ட் அடித்து விர்ச்சுவல் வாரியராக இருந்த பிரதீப் ரங்கநாதன் கிளாஷ் எல்லாம் ஆரம்பத்தில் ஜாலியா இருந்தது. ஆனால், இப்போ எல்லாருடைய படங்களும் ஓட வேண்டும் என்று தோன்றுகிறது என மெச்சூரான மனிதராக மாறியுள்ளார்.
தன்னைத் தானே செதுக்கியவன் என அஜித் குமார் சொன்னாலும், அவர் சினிமாவில் அறிமுகமாக காரணம் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தான் என்பது போல பிரதீப் ரங்கநாதனுக்கு முதல் படமான கோமாளி படத்தின் வாய்ப்பு எப்படி, யாரால் கிடைத்தது என்பது குறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வெளிப்படையாக பேசிய பேட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இப்படியொரு ஜூனியர் எனக்கு கிடைக்கவில்லையே என கோடம்பாக்கத்தில் சினிமா கனவுகளுடன் போராடும் பலரும் நினைக்கும் அளவுக்கு அவருக்கு ஒரு சூப்பரான ஜூனியர் கிடைத்திருக்கிறார்.
100 கோடி நாயகன்: தமிழ் சினிமாவின் புதிய பாக்ஸ் ஆபீஸ் டிராகனாகவே பிரதீப் ரங்கநாதன் மாறியுள்ளார். அவர் நடித்த படங்கள் ஹாட்ரிக்காக 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் பல ஆண்டுகள் போராடிய பிறகு தான் 100 கோடி நாயகனாக மாறினார். ஆனால், பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து தான் ஒரு லாட்டரி ஸ்டார் இல்லை என்றும் சூப்பர் ஸ்டார் மெட்டீரியல் என்பதையும் நிரூபித்து வருகிறார். லவ் டுடே, டிராகன் படங்களை தொடர்ந்து டியூட் திரைப்படம் 5 நாட்களில் 100 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அப்பா லாக்: பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகமாவதற்கு முன்பாக அப்பா லாக் (App Lock) எனும் குறும்படத்தை இயக்கியிருந்தார். அந்த கதை தான் அவர் ஹீரோவாக நடித்து வெளியான லவ் டுடே படமாக வெளியானது குறிப்பிடத்தக்கது. கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது சினிமா கனவுகளுடன் சுற்றி வந்த பிரதீப் ரங்கநாதனுக்கு ஒரு ஜூனியரால் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்தது தான் தற்போது அவருடைய அசூர வளர்ச்சிக்கு முக்கியமான முதல்படியாக அமைந்துள்ளது.

ஐசரி கணேஷ் மகள்: எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் பிரதீப் ரங்கநாதன் படித்துக் கொண்டிருந்தபோது அந்த கல்லூரியில் ஜூனியராக சேர்ந்த ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தாவிடம் தனது டைரக்டிங் ஸ்கில்லை வெளிப்படுத்த, அவர் மூலமாகத்தான் ஐசரி கணேஷை சந்திக்கும் வாய்ப்பு பிரதீப் ரங்கநாதனுக்கு கிடைத்துள்ளது.
ஐசரி கணேஷ் பேட்டி: சமீபத்தில், ஐசரி கணேஷ் அளித்த பேட்டியில், என் மகளின் சீனியர் தான் பிரதீப், அப்பா ஒரு திறமையான சீனியர் இருக்கிறார், உங்களிடம் கதை சொல்ல நினைக்கிறார், கேக்குறீங்களான்னு மகள் கேட்டதும் ஓகே சொன்னேன். தம்பி வந்து கதை சொல்லும் போது யாரிடமும் வொர்க் பண்ணலன்னு சொன்னார். கதை கேட்டேன் புதுசா இருந்தது. யார் ஹீரோவாக நடிக்க வைக்கலாம்னு நினைக்கிறீங்க என்று கேட்டேன், ஜெயம் ரவி சார் நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னார்.
ரவியோட டேட் என்னிடம் இருந்தது. ரவிக்கு போன் போட்டு சொன்னேன், இன்று மாலையே ஃப்ரீ தான் சார் என்று சொன்னார். பிரதீப் அவரை மாலை சந்தித்து கதை சொன்னார், இரவு 9 மணிக்கு ரவி போன் போட்டு, கதை ஓகே சார், ஷூட் எப்போ போலாம் என்று கேட்டார். இப்படித்தான் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தை ஆரம்பித்தார். முதல் நாளில் இருந்தே கடுமையான உழைப்பை போட்டதால் தான் இன்று அவருடைய வளர்ச்சி இந்தளவுக்கு உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











