ஜனவரியில் ராணா படப்பிடிப்பு தொடங்கும்! - ரஜினி பேட்டி
திருப்பதி: தான் பூரண நலத்துடன் உள்ளதாகவும், ராணா படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என்பதையும் நிருபர்களிடம் தெரிவித்தார் ரஜினி.
உடல்நிலை சரியாகி, தான் எப்போதும் போல நல்ல சுறுசுறுப்புடன் இருப்பதை அனைவருக்கும் காட்டிவிட்ட ரஜினி, இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக புதன்கிழமை திருப்பதிக்கு குடும்பத்தினருடன் சென்றார்.
அதே துள்ளல் நடை, விறுவிறு பேச்சு, தனக்கே உரிய வேகத்தில் கும்பிட்டபடி நடந்து வந்தார் ரஜினி.
கூடியிருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்திய அவர், கடவுள் கிருபையாலும், ரசிகர்களின் பிரார்த்தனைகளாலும் தான் மிகவும் நலமுடன் இருப்பதாகக் கூறினார். திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்க வந்ததாகக் கூறிய ரஜினியிடம் நிருபர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு ரஜினி கூறிய பதில்கள்:
ராணா படம் என்ன ஆனது? படப்பிடிப்பு எப்போது?
ராணா படம் தொடங்க இன்னும் இரண்டொரு மாதங்கள் பிடிக்கும். காரணம் அது மிகப்பெரிய படம். பெரிய பட்ஜெட். ஆக்ஷன் மற்றும் காஸ்ட்யூம் ட்ராமா. அதற்கான முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். அநேகமாக ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும்.
சார்... உங்க ரசிகர்கள் பிரார்த்தனைகள் குறித்து...
அவர்களுக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். என் நன்றியை அவர்களுக்கு எப்படி சொல்வேன் என்று தெரியவில்லை. என் உடல் நலனில் மிகுந்த அக்கறை காட்டி செய்திகளை வெளியிட்டனர் ஊடகங்கள். அவர்களுக்கு என் நன்றி.
ரா ஒன்னில் ஷாரூக்கானுடன் நடித்துள்ளீர்களா?
ஆமாம்... ஷாரூக்கானுக்காக நடித்துக் கொடுத்தேன். அதில் பணியாற்றியது சந்தோஷம். நைஸ் எக்ஸ்பீரியன்ஸ்.
-இவ்வாறு கூறினார் ரஜினி. பின்னர் அனைவருக்கும் தனது அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











