சுமங்கலியா சாகணும்.. அவர் கைய புடிச்சிக்கிட்டே நடக்கணும்.. பிரியங்காவின் ஆசை.. இப்படி ஆகிடுச்சே
சென்னை: மிமிக்ரி கலைஞராக திரையுலக பயணத்தை தொடங்கி, நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் ரோபோ சங்கர். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ போன்றது தத்ரூபமாக நடித்து அசத்தியதால் அவரின் பெயருக்கு முன்னால் ரோபோ என்ற பெயர் சேர்ந்துவிட்டது. தனியார் தொலைக்காட்சிகளில் வெளியான அசத்தப்போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமான ரோபோ சங்கர், ஊர் திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் மிமிக்ரி பேசி மக்களை மகிழ்வித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும், கமலஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கருக்கு இறுதிவரை அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போனது. சில தினங்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட உடல்நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.நடிகர் ரோபோ சங்கரின் மறைவுக்கு நடிகர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்திய நிலையில், வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பிரியங்கா ரோபோ சங்கர்: இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், கணவன் மனைவி இருவரும் கூட்டாக youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தனர். அந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது. அதில், பேசிய பிரியங்கா, ரோபோ சங்கரின் உடலின் எடை நாளுக்கு நாள் குறைந்து வந்ததால், சந்தேகம் அடைந்து மருத்துவரிடம் சென்றோம். அப்போதுதான் அவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது தெரிந்தது. உடனே அவரை மருத்துவமனைகள் அனுமதிக்க சொன்னார்கள். ஆனால், இவர் மருத்துவமனைகள் இருக்க மாட்டேன் என கூறிவிட்டதால் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து அவருக்கு மருத்துவர்கள் என்னென்ன கொடுக்க சொன்னார்களோ, அதை நான் கொடுத்து வந்தேன்.
சுமங்கலியா சாகணும்: வாய்க்கு ருசியாக சாப்பிட்டு பழகிய இவரால், பத்திய சாப்பாடு சாப்பிடவே முடியவில்லை. இதனால், தொடர்ந்து இருவருக்கும் இடையே சண்டைகள் வந்தன. அப்போதுதான், மருத்துவர் வினோத், உடல்நிலை முடியாத இந்த நேரத்தில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நேரத்தில் அன்பை மட்டுமே கொடுத்து அவரை நம்முடைய வழிக்கு கொண்டு வர வேண்டும் என்றார். அதையும் நான் புரிந்து, அவரிடம் அன்பாக பேசினேன், நீ இல்லை என்றால் இந்த குடும்பத்திற்கு யார் இருக்கா... என்னையும் பாப்பாவையும் யார் பார்த்துப்பா.. கடைசி வரைக்கும் சுமங்கலியாகவே இருக்க வேண்டும், உங்க கையை பிடித்துக் கொண்டே என்னுடைய வாழ்க்கையும் முடிய வேண்டும், கடைசி வரைக்கும் நீ என்கூட இருக்க வேண்டும், எனக்கு நீ உனக்கு நான், என்னை ஏமாற்றிவிடாதே என அனைத்து விஷயங்களையும் ஒவ்வொன்றாக நான் எடுத்து சொல்ல சொல்ல அவரும் அதை புரிந்து கொண்டு, நான் கொடுத்த மாத்திரைகள், உணவை எடுத்துக்கொண்டார்.
தொடர்ந்து நான்கு மாதம் வீட்டில் பெரிய போராட்டமே நடந்தது. இருந்தாலும் எப்படியாவது இவரை மீட்டுக் கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது, அதனால் பல போராட்டங்களை கடந்து இவரை எப்படியோ மீட்டுக் கொண்டு வந்து விட்டேன் என்று பிரியங்கா அந்த பேட்டியில் பேசி இருந்தார். கணவருக்காக பிரியங்கா கடுமையான போராட்டத்தையும் நடத்தி மீட்டுக்கொண்டு வந்தார். ஆனால், காலம் வேறுவிதமாக முடிவு செய்துவிட்டது.


Click it and Unblock the Notifications











