சினிமாவில் 10 ஆண்டுகள் நிறைவு, சென்னை, கோவையில் இசை விருந்து: அனிருத் ரசிகர்கள்லாம் கை தூக்குங்க
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் திரைத்துறையில் தனது பத்து ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளார்.
கடைசியாக அனிருத் இசையில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
இந்நிலையில், திரைப்பயணத்தில் 10 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக அசத்தலான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அனிருத்.

ஒய் திஸ் கொலைவெறி
தனுஷின் '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், முதல் படத்திலேயே ரசிகர்களை கொலைவெறியாக போட்டுத்தாக்கினார். இந்தப் படத்தில் இடம்பெற்ற் 'ஒய் திஸ் கொலைவெறி' பாடல், உலகம் முழுக்க ஒரு ரவுண்ட் வந்தது, ரசிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களையும் ஆட்டம் போட வைத்த இந்தப் பாட்டு தான், அனிருத்தின் வாழ்க்கையில் பிரகாசமான ஒளியை ஏற்றிவைத்தது.

தனுஷுடன் தொடர்ந்து மாஸ் காம்போ
அனிருத்தை தனுஷ் அறிமுகப்படுத்தியதோடு, தொடர்ந்து பல படங்களுக்கும் வாய்ப்புக் கொடுத்தார். வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்க மகன் என மாஸ் காட்டிய இவர்கள், திடீரென பிரேக் அப் ஆனார்கள். இந்த காம்போ திரும்பவும் பழைய பன்னீர்செல்வமாகவே வரவேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். அதற்கு பலனாக இப்போது 'தாய் கிழவி', 'பறக்க பறக்க' என 'திருச்சிற்றம்பலம்' படம் மூலம், லவ்லியா திரும்பி வந்துள்ளனர்.

சிவகார்த்திகேயனும் அனிருத்தும்
அனிருத், சிவகார்த்திகேயன் இருவருமே ஒரே காலக்கட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகினர். 3, எதிர் நீச்சல் என முதல் இரண்டு படங்களில் தொடங்கிய இவர்களின் நட்பு, அடுத்தடுத்து மான் கராத்தே. காக்கிச் சட்டை, ரெமோ, வேலைக்காரன், டாக்டர், டான் என ஹிட் மேல் ஹிட் கொடுத்து ரகளை செய்தது. கோலிவுட்டின் சூப்பர் காம்போ என, ரசிகர்கள் இவர்களை கொண்டாடி வருகின்றனர்.

விஜய், ரஜினியுடன் அல்டிமேட் செய்த அனிருத்
மெலடி, குத்துப் பாடல்கள் என இன்ஸ்டண்ட் ஹிட்களை கொடுத்த அனிருத்துக்கு ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. இதனால், ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விஜய் சேதுபதி என முன்னணி ஹீரோக்களுக்கும் தனது பீஜிஎம்மால் மாஸ் காட்டினார். ரஜினியுடன் பேட்ட, தர்பார், விஜய்யுடன் கத்தி, மாஸ்டர், பீஸ்ட், அஜித்துடன் வேதாளம், விவேகம் எல்லாமே சூப்பர் ஹிட்கள் தான்.

சென்னை, கோவையில் இசை நிகழ்ச்சி
இந்தாண்டு மட்டும் காத்துவாக்குல ரெண்டு காதல், டான், பீஸ்ட், டான், விக்ரம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், சினிமாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்ட அனிருத், அவரது ரசிகர்களுக்கு இசை நிகழ்ச்சி மூலம் ட்ரீட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம். இந்த இசை நிகழ்ச்சிகள் சென்னையிலும் கோவையில் நடக்கவுள்ளது.

ரசிகர்கள் ரெடியா?
செப்டம்பரில் சென்னையிலும், அக்டோபரில் கோவையிலும் இசை நிகழ்ச்சி நடக்கும் என, அனிருத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு "Once Upon a Time Tour" என 'விக்ரம்' பட ஸ்டைலில் டைட்டில் வைத்துள்ளார். முக்கியமாக அனிருத்தின் இசை நிகழ்ச்சியை, விஜய் தொலைக்காட்சியும், ஹாட்ஸ்டாரும் இணைந்து தயாரிக்கவுள்ளதும் உறுதியாகியுள்ளது. இதனால், அனிருத் ரசிகர்கள் பயங்கரமான உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











