15 வயதுப் பாடகனின் கனவை நிறைவேற்றப்போகும் ஏ.ஆர்.ரஹ்மான்!
சென்னை: மும்பை சேனல் ஒன்றின் பாடகர் தேடல் நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன் ஷாருக்கான் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த வைஷ்ணவ் கிரிஷ் ஷாருக்கானை அலேக்காகத் தூக்கியதன் மூலம் பிரபலமானார்.
அவர் பாடிய பாடல்கள் பலவும் சமூக வலைதளங்களில் வைரல் ஹிட்டாகியிருக்கின்றன. மலையாள ரியாலிட்டி ஷோவில் 2014-ம் ஆண்டு வின்னரான இவர் தேசியத் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு தனது பாடும் திறமையால் அனைவரையும் அசத்தி வருகிறார்.
அவர் பாடிய 'தில் மெரெ...' பாடலை ரசிக்காதவர்கள் மிகக் குறைவு.

அண்ணனின் மூலம் வந்த ஆர்வம்
"சிறுவயதிலேயே எனது அண்ணனின் மூலம்தான் இசை மீது ஆர்வம் ஏற்பட்டது. அவர் சிறுவயதில் பாடி பரிசுகள் வாங்கியதைப் பார்த்துத்தான் நான் பாடல்களை முணுமுணுக்கத் தொடங்கினேன்" எனவும் வைஷ்ணவ் கூறியுள்ளார்.

மனசு நிறையப் பாட வயிறு நிறையணும்
இசைக்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்தது சாப்பாடுதான். அதிலும் சிக்கனில் செய்த உணவுகள் மிகவும் பிடிக்கும். வயிறுநிறையச் சாப்பிட்டால்தான் மனசு நிறையைப் பாடமுடியும் எனச் சிரித்துகொண்டே அவர் கூறுகிறார்.

லட்சியக் கனவு
"ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முன்பு ஒருநாளாவது பாடவேண்டும் என்பதே எனது கனவு. அவரைச் சந்திக்கும் அந்த நாள் எனது வாழ்க்கையிலேயே சிறப்புவாய்ந்த தருணமாக இருக்கும். ‘ரோஜா' படத்திற்காக அவர் இசையமைத்த ‘காதல் ரோஜாவே...' பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று" எனக் கூறியுள்ளார்.

கனவை நிறைவேற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இது தேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம் என்பதாலும், விஜய், ரஹ்மான் ஆகியோருக்கு இது திரை வாழ்வில் 25-வது ஆண்டுக் கொண்டாட்டம் என்பதாலும் வருகிற ஆகஸ்ட் 20-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.

ரஹ்மான் இசை
அந்த விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் கான்செர்ட் நடத்த இருக்கிறார். அந்த கான்செர்ட்டில் பாடுவதற்கு வைஷ்ணவ் கிரிஷுக்கும் வாய்ப்பு கொடுத்து அவரை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். தனது கனவு இவ்வளவு சீக்கிரம் நிறைவேறியதில் தம்பி இப்போ செம ஹேப்பி!


Click it and Unblock the Notifications











