தாரை தப்பட்டை... இசை விருந்து வைத்திருக்கும் இளையராஜா!
இளையராஜா இசையை எவ்வளவு பிடிக்கும்? என்று யாராவது கேட்டால் விளக்கம் சொல்லத் தெரியாது, அவரது இசைக் காதலர்களுக்கு. அப்படி எல்லையில்லாத விருப்பத்துக்குரிய இசை அவருடையது.
இன்றைய சூழலில் அவரிடமிருந்து அதிக இசைத் தொகுப்புகள் வராமல் போனது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம். ஆனால் இனி இந்த ஏமாற்றம் தீர்ந்துவிடும் நிலை தெரிகிறது.
ராஜாவின் 1000வது படம் என்ற சிறப்பு அந்தஸ்துடன் வெளியாகியுள்ள பாலாவின் தாரை தப்பட்டை பாடல்களைக் கேட்டவர்கள் சொல்லும் ஒற்றைக் கமெண்ட் என்ன தெரியுமா... 'தமிழ் சினிமாவின் இப்போதைய இசைக் குப்பைகளை அடித்துச் சென்ற இசை வெள்ளம் தாரை தப்பட்டை'!
இது மிகையா... உண்மையா...
இதோ ஒரு பார்வை.

1. நாயகன் அறிமுக இசை
நாதஸ்வரமும் தவிலும், பம்பையும் ஆர்ப்பாட்டமாக ஒலிக்க, தொடங்குகிறது தாரை தப்பட்டையின் முதல் இசைக் கோர்வை. நாயகனின் அறிமுக காட்சி இசையாக இதை குறிப்பிட்டுள்ளனர். கேட்கும்போதே மயிர்க்கால்கள் சிலிர்க்கின்றன. இதுதான் தமிழ் இசை.. தமிழனின் பெருமைக்குரிய இசை என்பதை நச்சென்று இந்தத் தலைமுறைக்கு இசைத்துக் காட்டியிருக்கிறார் இளையராஜா!

2. வதன வதன வடிவேலனே...
இந்தப் பாடலின் தொடக்க இசை அபாரம். கேட்கும்போதே எழுந்து ஆட வேண்டும் போன்ற ஒரு சிலிர்ப்பையும் கிளச்சியையும் உண்டாக்குகிறது இந்தப் பாடல். நிச்சயம் தியேட்டரில் இந்தப் பாட்டுக்கு ஆடாத ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். பாடலை மோகன் ராஜ் எழுதியுள்ளார். கவிதா கோபி, ப்ரியதர்ஷினி பாடியிருக்கிறார்கள்.

3. பாருருவாய...
பாருருவாய பிறப்பற வேண்டும்
பத்திமையும் பெற வேண்டும்...
மாணிக்க வாசகர் அருளியை திருவாசகத்திலிருந்து இந்தப் பாடலை எடுத்தாண்டுள்ளார் இளையராஜா. தூய வீணை இசையுடன் தொடங்கும் இந்தப் பாடலையும் இசையையும் கேட்டு உருகாதார் எவருமிருக்க முடியாது. உணர்ந்து பாடியிருக்கிறார்கள் சுர்முகியும் சத்யபிரகாஷும்.

4. இடரினும்...
"என் உள்ளம் கோயில் அங்கே உண்டு தெய்வம்... அது இந்த கீதம் அல்லவா.." என்ற உருக்கமான இந்தப் பாடலை இசைஞானி இளையராஜாவே எழுதியிருக்கிறார்.
மேகமற்ற வான்போல
தெளிந்த தண்ணீர்போல
ஊற்றெடுக்கும்
இசையமுதம்
எந்தன் மீது ஓடும்...
-இதை விட வேறென்ன சொல்வது இந்தப் பாடல் பற்றி!

5.ஆட்டக்காரி....
கூதற்காற்றின் சிலிர்ப்பை, பனிக் காலத்தின் குளுமையை, காமத்தில் கிளர்ந்த மனங்களின் ஆர்ப்பரிப்பை இதை விட இனிமையாக இசையாக வடிக்க வேறெவராலும் முடியுமா தெரியவில்லை! பிரமாதம். மானசி, பிரசன்னா பாடியுள்ள இந்தப் பாடலை இயற்றியிருப்பவர் இசைஞானியேதான்.
6. தாரை தப்பட்டை தீம்...
அண்ட சராசரங்களையும் அதிர வைப்பது போன்ற ஒரு ஆர்ப்பரிப்புடன் தொடங்குகிறது இந்த இசைக் கோர்வை. நாதஸ்வரம், தவில், பறை, கொம்பு, பம்பை, என தமிழரின் இசைக் கருவிகளை இத்தனை கம்பீரத்துடன் இதற்கு முன் வேறு எந்தப் படத்திலும் பயன்படுத்தியிருப்பார்களா தெரியவில்லை. ஊழித் தாண்டவத்தை கண்முன் நிறுத்தும் இசை!


Click it and Unblock the Notifications











