எந்திரன் விழாவில் அமைச்சர் சுப்ரமணியத்துக்கு அவமரியாதை-மலேசியத் தமிழர்கள் அதிருப்தி
கோலாலம்பூரில்: நடந்த எந்திரன் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் மலேசிய நாட்டு அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவருமான டாக்டர் சுப்ரமணியம் அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக மலேசியத் தமிழர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்போது தமிழக அரசு டாக்டர் சுப்ரமணியத்திற்கு உரிய கெளரவத்தையும், மரியாதையையும் கொடுத்திருந்த நிலையில், ஒரு சினிமாப் பட விழாவில் அமைச்சர் சுப்ரமணியம் அவமரியாதை செய்யப்பட்ட செயல் கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக மலேசிய தமிழர்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் எந்திரன் பட ஆடியோ வெளியீடு நடைபெற்றது. தமிழகத்தில் நடத்தாமல் இதை மலேசியாவில் நடத்தப் போவதாக செய்திகள் வெளியானதால், தமிழகத்திலேயே கூட திரையுலகினர் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது.
இந்த நிலையில் புத்ரஜெயா மாநாட்டுக் கூடத்தில் நடந்த பிரமாண்டமான ஆடியோ விழாவில் மலேசிய நாட்டு தமிழர் தலைவரும், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான சுப்ரமணியமும் அழைக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு விழாவில் அவமரியாதை நடந்துள்ளதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. அவரை மேடையில் அமர வைக்கவில்லை. மாறாக பார்வையாளர் வரிசையில் உட்கார வைத்து விட்டனர். அது போக, விழாவின்போது பலரும் பேசினர். ஆனால் சுப்ரமணியம் மட்டும் பேச அழைக்கப்படவில்லை.
தங்கள் நாட்டுக்கு வந்து விழாவை நடத்தி விட்டு, தங்களது அமைச்சரையே அவமதிக்கும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நடந்து கொண்டிருப்பதாக மலேசியத் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











