விஜய், பேரரசுக்கு நீதிபதி கிடுக்கிப் பிடி!

ஏ.எம்.ரத்தினம் தயாரித்த படம் சிவகாசி. பேரரசு இயக்கிய இப்படத்தில் விஜய், ஆசின் நடித்துள்ளனர். 2005ம் ஆண்டு இது வெளியாகி பெரும் வெற்றியையும் பெற்றது.
இந்த நிலையில் இப்படம் வக்கீல்களின் பெயரைக் கெடுக்கும் வகையில் இருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் 13 கோர்ட்டுகளில் வக்கீல்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதுதொடர்பாக விஜய், தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டன.
இந்த நிலையில், விஜய், பேரரசு, தயாரிப்பாளர் ரத்னம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த படம் உள்நோக்கத்துடன் எடுக்கப்படவில்லை. வக்கீல்களின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் எடுக்கவில்லை. ஆகவே, எங்கள் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து சிவகாசி படம் தொடர்பாக மாஜிஸ்திரேட் கோர்ட்டுளில் நிலுவையில் உள்ள வழக்குளை விசாரிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்குகளை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் நேற்று நீதிபதி ஆர்.ரகுபதி முன்பு விசாரணைக்கு வந்தது.
நடிகர் விஜய் தரப்பில் வக்கீல் பீமனும், வக்கீல்கள் சார்பில் வக்கீல் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரனும் ஆஜராகி வாதாடினார்கள்.
வக்கீல் பீமன்:- சினிமா என்பது கேளிக்கைக்காக எடுக்கப்படுவதாகும். கேளிக்கை என்ற பெயரில் நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை. படம் தொடங்கும் முன்பே கதை, சம்பவம், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே
என்று எச்சரிக்கை விடுத்து டைட்டில் போடுகிறோம்.
ஒரு எல்லை இல்லையா..?
நீதிபதி: கேளிக்கை என்பதற்கும் ஒரு எல்லை உள்ளது. கற்பனையே என்று கூறிவிட்டு, எதை வேண்டுமானாலும் காட்டலாமா? கேளிக்கை என்ற பெயரில் டாக்டர்கள், வக்கீல்கள் போன்றவர்களை விமர்சிக்கலாமா?
பீமன்: ஆட்சேபகரமான காட்சிகளை நீக்கிவிட்டோம்.
நீதிபதி:- நீக்கப்பட்டது குறித்து விளம்பரம் செய்தீர்களா? படத்தை வெளியிடும் முன்பு எவ்வளவு விளம்பரப்படுத்துகிறீர்கள், அதேபோன்று காட்சிகள் நீக்கியதற்கும் விளம்பரப்படுத்தினீர்களா?
ஒவ்வொரு தொழிலிலும் நல்ல விஷயமும் உள்ளது. மோசமான விஷயமும் உள்ளது. நீங்கள் ஒரு தொழிலில் உள்ள மோசமான விஷயங்களை தான் சித்தரித்துள்ளீர்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக ஏராளமான வக்கீல்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார்கள். இப்போதும் பெரும்பாலான வக்கீல்கள் அரசியல்வாதிகளாக உள்ளனர்.
பீமன்: நடிகர்கள் எல்லாம் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கிறார்கள். குற்றச்சாட்டு அனைத்தும் இயக்குனர் மீது கூறப்பட்டுள்ளது. யாரையும் புண்படுத்தும் நோக்கில் உள்நோக்கத்துடன் இந்த படம் எடுக்கப்படவில்லை.
இந்த படத்தை வெளியிடுவதில் தவறு இல்லை என்று கருதி மத்திய சினிமா தணிக்கை துறையும் சான்றிதழ் வழங்கியுள்ளது. எதையும் நேரடியாக கூறினால்தான் அவதூறு ஏற்படும். இந்த படத்தை பொறுத்தவரையில் அவதூறு என்பதற்கு இடமே இல்லை.
எஸ்.பிரபாகரன்: வக்கீல் தொழிலை பாதிக்கும் வகையில் இந்த படத்தில் காட்சிகள் உள்ளன. நடிகை அசின் ஒரு வக்கீலை தாக்குவதுபோல் உள்ளது. கவுரவம்' படத்தில் வக்கீலை உச்சக்கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிவகாசி' படத்தில் வக்கீல்களை மட்டமாக விமர்சித்துள்ளனர். இதில் உள்நோக்கம் உள்ளது.
மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் 13 வழக்குகளையும் தொடர்ந்தது வக்கீல்கள்தான். பல காட்சிகளை நீக்க வேண்டுமென்று சென்சார் போர்டுக்கு நோட்டீசு அனுப்பினோம். ஒருவரி வசனம்கூட படத்தில் நீக்கப்படவில்லை.
சினிமா வர்த்தகம் செய்ய அடிப்படை உரிமை உள்ளது. ஆனால் அதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. பொழுதுபோக்கு என்ற பெயரில் இந்த படத்தில் வக்கீல்களை தவறாக சித்தரித்து காட்டியுள்ளனர்.
எனவே, படஅதிபர், இயக்குனர் மட்டுமல்லாது, படத்தில் நடித்த நடிகர்களும் அவதூறு சட்டத்தின்கீழ் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று வாதிட்டார்.
வழக்கு விசாரணை வருகிற 16ம் தேதி மீண்டும் நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications











