தேனீர் விடுதி... இயக்குநராக மாறிய இசையமைப்பாளர்!!

அவர் முதல்முதலாக இயக்கும் படத்துக்குப் பெயர் தேனீர் விடுதி.
உண்மையில் எஸ்எஸ் குமரன் திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுத் துறைக்காக படித்தவர். ஆனால் சம்பந்தமே இல்லாமல் இசையமைப்பாளராக வந்தார். பெயரும் பெற்றார்.
இப்போது இயக்குநராகியிருக்கிறார். இந்தப் படத்தை இயக்கும் முன் அவர் யாரிடமும் குறைந்தபட்சம் உதவி இயக்குநராகக் கூட இருந்ததில்லை என்பது, குமரனின் தன்னம்பிக்கைக்கு சான்று.
இனிது இனிது படத்தில் அறிமுகமான ஆதித், ரேஷ்மி ஜோடி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
தேனி பகுதியில் பந்தல் நடும் தொழில் செய்யும் இளைஞன் ஒருவனுக்கும், அதே ஊரில் இருக்கும் செல்வந்தரான செட்டியார் குடும்பத்து பெண்ணுக்கும் காதலை கலகலப்பான பின்னணியில் சொல்லியிருக்கிறாராம் குமரன்.
தமிழ்சினிமா வரலாற்றில் இப்படி ஒரு ஐ லவ் யூவை யாருமே சொல்லியிருக்க முடியாது. அப்படி ஒரு காட்சி வருகிறது படத்தில். தன் காதலை ஹீரோவும் சொல்ல மாட்டார் ஹீரோயினிடம். அதே மாதிரி ஹீரோயினும் தன் காதலை சொல்ல மாட்டார். ஆனால் இருவருமே ஒரு கட்டத்தில் ஐ லவ் யூ சொல்லிக் கொள்வார்கள். எப்படி என்பதை யாருமே யூகிக்க முடியாதபடி காட்சிப்படுத்தியிருக்கிறாராம் எஸ்.எஸ்.குமரன்.
இசையமைப்பாளர் இயக்கியுள்ள படமாச்சே. குறைந்தது எட்டு பாடலாவது இருக்கும் என்று யாரும் நினைத்து விட முடியாது. படத்தில் இடம் பெறுவது மொத்தம் மூன்றே பாடல்கள்தானாம். அதுவும் ஒரு பல்லவி, ஒரு சரணத்தோடு முடிந்துவிடும் அந்த மூன்று பாடல்களும். ஏன் இப்படி என்று இயக்குனரிடம் கேட்டால், "கதைக்காகதான் பாடல்களே தவிர, பாடல்களுக்காக கதை இல்லை. இந்த கதைக்கு இவ்வளவுதான் தேவைப்பட்டது. ரசிகர்கள் ஒரு பாடலுக்கு எழுந்து தம் அடிக்க போய்விட்டால், படத்தின் முக்கியமான திருப்பங்களை மிஸ் பண்ண வேண்டி வரும். அதாவது பாடல்கள் அத்தனையும் கதையோடு பின்னி பிணைந்தவை," என்கிறார் எஸ்.எஸ்.குமரன்.
பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது இந்த காட்சிகளை பார்த்த இசைக்கலைஞர்களும், டப்பிங் நேரத்தில் காட்சிகளை பார்த்த டப்பிங் கலைஞர்களும் கூட விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்களாம். அந்தளவுக்கு இது முழு நீள காமெடிப்படம் என்ற குமரன், இன்னொரு விஷயத்தையும் அழுத்தமாக சொல்கிறார். படத்தின் முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்துவிடும். ஒரு காட்சி கூட தேவையில்லாததாக இருக்காது என்பதுதான் அது.
குளோஸ் அப் விளம்பரத்தில் வரும் 'நெருங்கி வருவாய்...' என்ற பாடலை பாடிய சோனா மோகபத்ராவை முதன் முறையாக தமிழில் பாட வைத்திருக்கிறார் எஸ்.எஸ்.குமரன்.
படத்துக்கு ஒளிப்பதிவு- மணவாளன், கலை- ஸ்ரீ, எடிட்டிங்- பி.எஸ்.மகேந்திரன், மக்கள் தொடர்பு ஆர் எஸ் அந்தணன், தயாரிப்பு - எஸ்.அனுஷாதேவி
இந்தப் படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி, இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் சிறப்பு விருந்தினகாகக் கலந்து கொண்டு, இயக்குநர் அவதாரமெடுத்துள்ள எஸ் எஸ் குமரனை வாழ்த்திப் பேசினார்.
விழாவில், தன்னுடன் முதல் படத்திலிருந்து பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றி அவர்களை கவுரவித்தார் குமரன் என்பதும் குறிப்பிட வேண்டிய செய்தி. இப்படி மேடையேற்றப்பட்ட கலைஞர்கள் பலர் ஐம்பது அறுபது வருடங்களாக மெல்லிசை மன்னர், இசைஞானி ஆகியோரிடம் பணியாற்றி வந்தவர்கள்!


Click it and Unblock the Notifications











