18 ஆண்டு திரைப்பயணம்.. தனித்துவமான இயக்குனர்.. செல்வராகவனின் சாதனை தொடரட்டும் !
சென்னை : தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதவர்கள். அவர்களின் திரைக்கதை, படத்தை உருவாக்கும் விதம் என ஒவ்வொரு இயக்குனரிடமும் இருக்கும் தனித்தன்மை நமக்கு பிடித்தமானதாக இருக்கும்.
Recommended Video
அப்படி ஒரு வித்தியாசமான கதை சொல்லும் முறையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்த பெருமை இயக்குனர் செல்வராகவனையே சேரும். மேலும், தனுஷ் என்ற ஒரு நடிகரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியதும் இவர் தான்.
தனுஷை தொடர்ந்து இவரும் தன் திரையுலகில் 18வது வருடத்தை கடந்து பயணிக்கிறார். இவரின் திரை வாழ்க்கையை சற்று திரும்பி பார்ப்போம்.

தனுஷ் அறிமுகம்
21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரே மாதிரியான திரைக்கதைகளை பார்த்து சலித்துப்போன சினிமா ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக தமிழ் சினிமாவில் கால்பதித்தார் செல்வராகவன். 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதையாசிரியராகவும் பின் இயக்குனராகவும் அறிமுகமான செல்வராகவன் பல சினிமா ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றார். அவரின் முதல் படத்தை தன் தம்பியான தனுஷை ஹீரோவாக வைத்து எடுத்தார். தனுஷ் தமிழ் சினிமாவின் மாபெரும் சொத்து, இப்படிப்பட்டவரை அறிமுகப்படுத்தியதும் செல்வராகவன் அவர்கள்தான்!

வித்தியாசமான கதை
2003ல் இவரின் இயக்கத்தில் தனுஷை ஹீரோவாக வைத்து எடுத்த தேவதையை கண்டேன் திரைப்படம் வெளியானது.பலரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது அந்த படத்தின் பாடல்களும் இன்று வரை பலராலும் பேசப்படுகிறது. ஒரு இளைஞன் இப்படியும் காதல் செய்வானா என பலரையும் ஆச்சரிய பட வைத்தது காதல் கொண்டேன் திரைப்படம். பொதுவாக ஆண்கள் தான் பெண்களை காதலித்து ஏமாற்றுவார்கள். ஆனால், இந்த படத்தின் கதையோ பெண் ஆணை காதலித்து ஏமாற்றுகிறார் அதற்கு தனுஷ் நீதிமன்றத்தில் நியாயம் கேட்கிறார். இதுவரை தமிழ் சினிமா பார்த்திராத கதை.

தனித்துவமான இயக்குனர்
7ஜி ரெயின்போ காலனி இந்த திரைப்படம் காதலர்களிடையே இன்றளவும் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கதைக்களமும் சரி, பாடல்களும் சரி என்றும் பசுமையாக நெஞ்சில் நிறைந்து இருக்கும். இந்த படத்தில் வரும் ‘நினைத்து நினைத்துப்பார்த்தால்‘ பாடலை எப்போது கேட்டாலும் மனதில் ஒரு வித வலியை ஏற்படுத்தும். இந்த படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து செல்வராகவன் ஒரு தனித்துவமான இயக்குனராக பார்க்கப்பட்டார்.

சிறந்த கேங்ஸ்டர் படம்
இதனையடுத்து வெளியான புதுப்பேட்டை திரைப்படம் இன்று வரை தமிழ் சினிமாவின் சிறந்த கேங்ஸ்டர் படமாக திகழ்கிறது. இந்த படம் வெளியான போது பெரிதாக வரவேற்பு இல்லை. ஆனால் இன்றோ பலரும் ரசிக்கும் படமாக உள்ளது. கோபம், அழுகை, காதல், காமம் என அனைத்துமே இந்த படத்தில் சரிசமமாக இருக்கும். கதை களமும் திரைக்கதையும் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத ஒன்றாக அமைந்ததால் இன்றுவரை இந்த படம் பேசப்படுகிறது.

தனி அடையாளம்
அதே போல் தொடர்ந்து வெளியான ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் ரிலீஸின் போது பெருமளவில் பேசப்படவில்லை. ஆனால் இப்போதோ பல சினிமா ரசிகர்களின் விருப்பமிக்க படமாக ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகப்போர் போன்ற படங்கள் திகழ்கிறது. தமிழ் சினிமா என்றாலே மகிழ்ச்சியான க்ளைமேக்ஸ் தான் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை கதைக்கு ஏற்றார் போல் அமைந்தால் போதும் என்ற எண்ணமே செல்வராகவனின் அடையாளம்.

ரசிகர்கள் வாழ்த்து
பல சாதனைகளை படைக்கத்துடிக்கும் பல இளைஞர்களுக்கு செல்வராகவன் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். அவரின் படங்கள் ஒவ்வொன்றும் இன்றும் அவரது சாதனைகளை பேசிவருகின்றன. இதற்கு காரணம் வித்தியாசமான கதைக்களம், வித்தியாசமான திரைக்கதை அமைப்பு என எதிலும் ஒரு தனித்துவம் வேண்டும் என்ற எண்ணமே. இவர் இன்று தன் திரையுலக பயணத்தில் 18வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். இவர் மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











