பெட்டிக் கடைகளில் சிறுத்தை பட திருட்டு சிடிக்களை விற்கின்றனர்-கார்த்தி புகார்
சிறுத்தை படத்தின் திருட்டு விசிடி விற்பனையை தடுத்து நிறுத்தக் கோரி நடிகர் கார்த்தி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.
கார்த்தி நாயகனாக நடிக்க, அவரது உறவினரான ஞானவேல்ராஜா தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் சிறுத்தை. இப்படத்தின் திருட்டு விசிடிக்கள் சரமாரியாக விற்பனையாகி வருகிறதாம்.
இதையடுத்து திருட்டு விசிடியும் கையுமாக கார்த்தியும், ஞானவேல் ராஜாவும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தனர். பின்னர் கார்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சிறுத்தை படம் வெளியாகி 4 நாட்கள் கூட ஆகவில்லை. தற்போது அதன் திருட்டி டி.வி.டி.களை வெளியிட்டுள்ளனர். கல்லூரி வாசல், கோவில் வாயில் என எல்லா இடங்களிலும் இந்த டி.வி.டி.கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன் ஆதாரமாக நாங்களும் அந்த டி.வி.டி.களை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறோம்.
தியேட்டரில் திருட்டுத்தனமாக படம் பிடித்து அதை சி.டி.யாக்கி வெளியே விற்கின்றனர். இணையதளத்திலும் வெளியிட்டுவிட்டனர். இந்த படத்தை எதிர்ப்பவர்கள் யாரும் இப்படி செய்ததாக கூற முடியாது. ஏனென்றால் மற்ற படங்களின் திருட்டு டி.வி.டி.களும் வெளியிடப்பட்டு உள்ளன.
திருட்டி டி.வி.டி. விவகாரம் சினிமா துறையில் பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது. எதையாவது செய்து அந்த குற்றத்தை ஒழிக்க வேண்டும். இதுபற்றி கமிஷனரிடம் கூறினோம். பெட்டிக்கடைகளில் கூட சகஜமாக திருட்டி டி.வி.டி.கள் கிடைப்பது பற்றி தெரிவித்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் தெரிவித்தார் என்றார் கார்த்தி.


Click it and Unblock the Notifications











