விஜய்யின் அரசியல் சுற்றுப்பயணம்.. நிகழ்ந்த அசம்பாவிதம்.. பிஞ்சு குழந்தைகளும் பலி
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். வாராவாரம் சனிக்கிழமை தொண்டர்களை சந்திக்கும் அவர் இன்று கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பரப்புரை வாகனத்தில் இருந்தபடி பரப்புரை மேற்கொண்டார். கரூரில் நடந்த கூட்டத்தின்போது பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கிறதுல்
தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக விளங்கி வந்த நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். அவர் கட்சி தொடங்கியதும் அவரது ரசிகர்களாக இருந்த பலரும் தொண்டர்களாக மாறி இருக்கிறார்கள். எப்படியாவது நடக்கவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யை வெல்ல வைத்து கோட்டைக்கு அனுப்பிட வேண்டும் என்பதில் முழு உழைப்போடு வேலைகளை செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.
விஜய்யும் மாஸ்டர் பிளான்: தொண்டர்கள் மட்டுமின்றி விஜய்யும் அந்த பிளானில்தான் இருக்கிறார். கட்சியின் முதல் மாநில மாநாட்டில் அரசியல், கொள்கை எதிரியையும் அறிவித்த அவர் திமுகவை தொடர்ந்த அட்டாக் செய்துவருகிறார். அதற்கு திமுகவினரும் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள். நிச்சயமாக விஜய்க்கு அரசியல் வரலாறு தெரியவில்லை என்றெல்லாம் பலரும் பேசினார்கள். சூழல் இப்படி இருக்க மக்களை சந்தித்து பேசும் நிகழ்வாக உங்கள் விஜய் நான் வரேன் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார்.

கட்டுக்கடங்காத கூட்டம்: திருச்சியில் இருந்து இந்த சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தவர் வாராவாரம் தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். பேருந்தில் இருந்தபடி அவர் பேசுவதும் அதற்கு கட்சியின் தொண்டர்கள் ஆரவாரம் செய்வதுமாக இத்தனை வாரங்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அதேசமயம் அக்கட்சியின் தொண்டர்கள் நடந்துகொண்ட விதமும் பலரிடமும் கண்டனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூரில் சோகம்: சூழல் இப்படி இருக்க வாராவாரம் தொண்டர்களை சந்திக்கும் அவர் இன்று நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் தொண்டர்களை சந்தித்து பேசினார். வழக்கம்போல் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியவர் மேற்கொண்டு சில விஷயங்களை பேசினார். இன்றைய பேச்சில் அவர் குறிப்பிட்ட சில விஷயங்கள் பொய்யானவை என திமுகவினர் பேசவும் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த 31 பேரில் 6 குழந்தைகள் என்பதும் சோகத்திற்குரிய ஒன்று. மூன்று குழந்தைகளை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகிறார்கள். கூட்ட நெரிசலில் மாடியிலிருந்து சிலர் குதித்ததாகவும் 31 பேரும் உயிரிழந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்கள் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். அது மட்டுமின்றி நாளை கரூருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் நேரில் செல்கிறார் விஜய் அரசியலுக்கு வந்து இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது அவரது அரசியல் பயணத்திற்கு முதல் முட்டுக்கட்டையாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











