இசைஞானியும் இசைமுரசும்.. மூன்று முத்தான பாடல்கள்!
மறைந்த இசைமுரசு நாகூர் இஎம் ஹனிஃபா பல ஆயிரம் இஸ்லாமியப் பாடல்களையும் திமுக பிரச்சாரப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.
இப்படி ஒரு அரிய குரலை திரைத்துறையில் ரொம்ப காலமாக யாரும் பயன்படுத்தாமல் இருந்தனர். பாவ மன்னிப்பு படத்தில் இடம்பெற்ற எல்லோரும் கொண்டாடுவோம்.. பாடலில் சில வரிகளை பாடியிருந்தார் நாகூர் ஹனிஃபா. பின்னர் சினிமாவில் பாடுவதில் பெரிய நாட்டம் காட்டவில்லை அவர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு இசையமைப்பாளருக்கு பாடச் சம்மதித்தார். அவர் இசைஞானி இளையராஜா.
செம்பருத்தி படத்தில் இடம்பெற்ற மிக அருமையான பாடல் கடலிலே தனிமையில் போனாலும்... எனத் தொடங்கும் சூழ்நிலைப் பாடல். பாடலின் கடைசி சரணத்தை மட்டும் மனோ பாடியிருப்பார். மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது நாகூர் ஹனிஃபாவின் இந்த முதல் திரைப்பாடல்.
அடுத்த பாடலை ராமன் அப்துல்லா படத்துக்காகப் பாடியிருந்தார் இசைமுரசு.
உன்மதமா என்மதமா ஆண்டவன் எந்த மதம் என்று தொடங்கும் அந்தப் பாடலும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் பாடலை முழுவதும் ஹனீஃபாவே பாடியிருந்தார்.
நாகூர் ஹனீஃபா பாடிய மூன்றாவது பாடல் இடம்பெற்ற படம் தர்மசீலன். இளையராஜா இசையில் எஸ் பி பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார் ஹனீஃபா. எங்கும் உள்ள அல்லா பேரைச் சொல்லு நல்லா... எனத் தொடங்கும் பாடல் அது.
இந்த மூன்று பாடல்களுமே மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











