எனக்கு அமைதி தேவை..ஓட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட நடிகை !
மும்பை : பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உலகில், அதே பரபரப்புக்கு ஈடுகொடுத்து அனைவரும் ஓடிக்கொண்டு இருப்பதால், காரணமே இல்லாத மன அழுத்தத்தில் சிக்கி தங்கள் விலை மதிப்பில்லா உயிரை காவு கொடுத்து விடுகின்றனர்.
அதுவும் அனைவரும் வியந்து பார்த்து மெய்மறந்து பூரித்துப்போகும் சினிமாவில் இருக்கும் பலர் மனஅழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாடல் அழகியான அகன்ஷா மோகன் தனியார் சொகுசு ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அகன்ஷா மோகன்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்த மாடலும் நடிகையுமான அகன்ஷா மோகன். மும்பை அந்தேரியில் உள்ள தனியார் சொகுசு ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஓட்டலின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

எனக்கு அமைதி தேவை
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரதேச பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். போலீசார் அறையை சோதனை செய்ததில் ஓட்டல் அறையில் கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில், என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை, என் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை, இப்போது எனக்கு அமைதி தேவை என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன் என எழுதி உள்ளார்.

விபரீத முடிவு
எனினும், போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மாடல் அழகி அகன்க்ஷா லோகண்ட்வாலாவின் யமுனா நகர் சொசைட்டியில் வசித்துள்ளார் என்றும், புதன்கிழமை மதியம் 1 மணியளவில் ஹோட்டலில் செக் இன் செய்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். இதற்குப் பிறகு, அகன்ஷா இரவு உணவையும் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு அதன்பிறகே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

பல விளம்பர படங்களில்
30 வயதான மாடல் அழகி அகன்ஷா மோகன் சமீபத்தில் வெளியான 'சியா' என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற ரோலில் நடித்துள்ளார். மேலும், இவர் சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். பிரேத பரிசோதனை முடிந்ததை அடுத்து அவரது உடல் இறுதிச்சடங்குக்காக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீராத மன அழுத்தத்தால் சிலர் இந்த விபரீத முடிவை எடுத்துவிடுகின்றனர். தற்கொலை எண்ணம் தோன்றினால் அதற்காக தனியாக செயல்பட்டு வரும் மையங்களில் தயவு செய்து ஆலோசனை மேற்கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications











