முத்துக்குமார் மரணம் தரும் பாடம்... இது மாற்றத்துக்கான நேரம்!
- பட்டுக்கோட்டை பிரபாகர்
முத்துக்குமாரின் மரணத்திற்கு கண்ணீர் சிந்தி கவிதையால் அனுதாபம் காட்டி சட்டென்று மறந்து போய் சுதந்திர தின பட்டி மன்றத்திற்குச் சிரிப்பதை விடவும்.. அவரின் மரணம் தரும் பாடத்தை மனதில் ஏந்த வேண்டியது அனைவருக்கும் குறிப்பாக இந்தத் தலைமுறை இளம் படைப்பாளிகளுக்கு மிக அவசியம். கட்டாயக் கடமை.
ஞானியும்,கமல்ஹாசனும் லேசாகக் கோடி காட்டினார்கள். "மெல்ல மெல்ல செய்து கொண்ட தற்கொலை இதுவென்பதால் கோபம்,'' என்றார் கமல். "படைப்புத் திறனுக்கும் சில பழக்க வழக்கங்களும் கொஞ்சமும் சம்மந்தமில்லை,'' என்றார் ஞானி.

எப்போதும் எங்கோ நடக்கும் பிரச்சினைகள் நம்மை அதிகம் பாதிப்பதில்லை. வேறு ஊரில் குடிசைகள் தீப்பிடித்து எரிந்தால் அது சாதாரணச் செய்திதான். நம் தெருவில் என்றால் கூடுதல் பதட்டமும் எச்சரிக்கை உணர்வும் சேரும். எந்த இழப்பும் வேதனையும் நம் நெருக்கத்தில் நிகழும்போதுதான் அதன் வலிமையும் வீரியமும் அழுத்தமாகப் புரியும்.
இளம் மனைவியையும், ஒன்பது வயது பையனையும், எந்த விபரமும் தெரியாமல் பூப்பூவாய் புன்னகைக்கும் எட்டு மாத பெண் குழந்தையையும் பரிதவிக்க விட்டுச் சென்றிருக்கிறார் முத்துக்குமார். இனி இதைத் திருத்தி எழுத முடியாது. கால இயந்திரத்தில் பயணித்து அவரை மீட்டு வரச் சாத்தியமில்லை.
ஆனால்... இனி இப்படி ஒரு தன்னைத் தானே சிதைத்துக் கொள்ளும் எவரையும் குறிப்பாக ஒரு படைப்பாளியைச் சந்திக்கும்போது விமரிசிப்பதை விடுத்து.. அவனை இந்த மாய வலையிலிருந்து மீட்டு விடுவிப்பதெப்படி என்று முனைப்புடன் முயல்வோம். வீட்டுக்கு ஒரு மரம் அப்புறம் வளர்ப்போம். ஒவ்வொரு வீட்டுக்கும் இருக்கும் ஒரே ஒரு தலைவனை முதலில் காப்போம்.
கண்ணீர் அஞ்சலி தெரிவித்த அத்தனைத் தலைவர்களும் இதற்காகவேக் கூடி அமர்ந்து பேசி ஒரு மிகப் பெரிய சமூக மாற்றத்திற்காக போருக்கு நிகரான போராட்டம் நிகழ்த்த வேண்டியது காலத்தின் முக்கியத் தேவையாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











