சாக்லேட் பாய் இமேஜ், மினிமம் கியாரண்டி: ராஜராஜ சோழனாகிய தனி ஒருவன் ஜெயம் ரவிக்கு இன்று பிறந்தநாள்
சென்னை: ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரவிக்கு, ஜெயம் ரவி என்றே பெயரே நிரந்தரமாகிப் போனது.
தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் ஜெயம் ரவி, இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜெயமாக தொடங்கிய சினிமா பயணம்
2000ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழில் பல புதிய முகங்கள் ஹீரோ அவதாரம் எடுத்தன, அவர்களில் முக்கியமானவர் ஜெயம் ரவி. தெலுங்கில் வெற்றிப் பெற்ற 'ஜெயம்' படம், அதே பெயரில் தமிழில் 2003ம் ஆண்டு ரீமேக்கானது. தெலுங்கில் ஹிட் அடிக்கும் படங்களின் தமிழ் உரிமையை எடிட்டர் மோகன் வாங்கிவிடுவார். அப்படி அவர் வாங்கியிருந்த ஜெயம் படத்தில், தனது மகன் ஜெயம் ரவியை ஹீரோவாக்கி அழகுப் பார்த்தார் மோகன். இந்தப் படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்குகிறார். ஜெயம் ரவி, சதா இருவருமே இந்தப் படத்தின் மூலம் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாக, அங்கிருந்து ஜெயமாக தொடங்கியது ஜெயம் ரவியின் சினிமா பயணம்.

ரீமேக் படங்களில் இருந்து சேஞ்ச் ஓவர்
'ஜெயம்' படத்தின் ஹீரோவாக மக்கள் மனதில் பதிவிட்ட பின்னர், ரவி என்ற பெயர் 'ஜெயம்' ரவியாக மாறிப்போனது. அதே பெயரில் தனது சினிமா கேரியரைத் தொடர்ந்து ஜெயம் ரவி, ஆரம்பத்தில் அண்ணன் மோகன் ராஜா ரீமேக் செய்த படங்களில் நடித்து வந்தார். எம். குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி, உனக்கும் எனக்கும் என அண்ணன் - தம்பி கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றன. அதேநேரம் நேரடியாக தமிழில் உருவான படங்களிலும் நடித்து வந்தார்.

சாக்லேட் பாய் இமேஜ் - மினிமம் கியாரண்டி
ஜெயம் ரவிக்கு பெரும்பாலும் அமைந்தது எல்லாமே காதல் பின்னணியில் உருவான படங்கள் மட்டுமே. எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி உட்பட சில படங்களில் ஆக்சனில் கலக்கியிருந்தாலும், சாக்லெட் பாய் இமேஜ் தான் ஜெயம் ரவிக்கு செட் ஆனது. அதேபோல், அவரது படங்கள் வசூலிலும் மினிமம் கியாரண்டி இருக்கும் என்ற நிலை உருவானது. ஜாலியாக கமர்சியல் ரூட்டில் சென்று கொண்டிருந்த ஜெயம் ரவி, எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் 'பேராண்மை' படத்தில் நடித்து பிரமிக்க வைத்தார். படம் மிகப் பெரிய வெற்றியடையவில்லை என்றாலும், ஜெயம் ரவியின் கேரியரில் ரொம்பவே முக்கியமான படமாக அமைந்தது பேராண்மை.

கெத்தாக தெறிக்கவிட்ட தனி ஒருவன்
கோலிவுட்டின் consistent hero-க்களில் ஒருவராக தன்னை வளர்த்துக் கொண்ட ஜெயம் ரவி, தனது அண்ணன் ராஜாவுடன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 'தனி ஒருவன்' படத்தில் இணைந்தார். இருவரது கூட்டணியில் முதல் நேரடியான தமிழ்ப் படம் என்ற எதிர்பார்ப்போடு வெளியான 'தனி ஒருவன்', தமிழ்த் திரையுலகையே அதிர வைத்தது. அமர்க்களமான திரைக்கதை, அல்டிமேட் மேக்கிங், அரவிந்த் சாமியின் அலட்டல் இல்லாத வில்லத்தனம், ஜெயம் ரவியின் ஸ்மார்ட்டான ஆக்டிங் என கம்ப்ளீட் கமர்சியல் பேக்கேஜாக வெளியாகி, சக்கைப்போடு போட்டது. தொடர்ந்து டிக் டிக் டிக், கோமாளி என ரவுண்டு கட்டினார் ஜெயம் ரவி.

ராஜராஜ சோழனாக முடிசூடிய ஜெயம் ரவி
தனி ஒருவன் திரைப்படம் தவிர மிகப் பெரிய ப்ளாக் பஸ்டர் படங்கள் எதுவும் இல்லையென்றாலும், நல்ல ஓப்பனிங், மினிமம் கியாரண்டி போன்றவை ஜெயம் ரவியின் மார்க்கெட்டுக்கு பலமாக அமைந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில், ராஜராஜ சோழனாக நடித்து பிரமிக்க வைத்துள்ளார். ஆரம்பத்தில் ஜெயம் ரவியின் நடிப்பை பலரும் விமர்சித்து வந்த நிலையில், இன்று ராஜராஜ சோழனாக முடிசூடி அவர்களின் வாயை அடைத்துள்ளார். இதுவே, இந்தாண்டு பிறந்தநாளில் ஜெயம் ரவி செய்துமுடித்துள்ள தரமான சம்பவம் என, அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











