“மக்களுக்கு சகிப்புத்தன்மை தேவை” – பிகே மீதான மனு தள்ளுபடி!
டெல்லி: பிகே படத்தின் மேலாக தொடுக்கப்பட்ட வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அமீர் கான் அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து நடித்த "பிகே" திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த படத்தில் இந்து மதத்துக்கு எதிரான காட்சிகள் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி படத்துக்கு தடை விதிக்கும்படி டெல்லி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறையும் சகிப்புத்தன்மை:
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரோகிணி தலைமையிலான அமர்வு, "சமீபகாலமாக நம் நாட்டின் மதம் தொடர்பான விஷயங்களில் மக்களிடையே சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. குறிப்பிட்ட சில விஷயங்களில் சகிப்புத்தன்மை அவசியம்.

கிள்ளி எறிய வேண்டும்:
சகிப்புத்தன்மை இல்லாமல் இருப்பது ஆபத்தான போக்கு. இதுபோன்ற நடைமுறையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில் காட்டுத்தீ போல பரவி நாட்டுக்கு பெரும் ஆபத்து ஏற்படும்.

உண்மையான விஷயங்கள்:
இந்த மனு கூட சகிப்புத்தன்மை இன்றி தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நடக்கும் உண்மையான விஷயங்களை கலைஞர்கள் திரையில் பிரதிபலிப்பதற்கு நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

தனிநபரின் உரிமை:
ஒரு படத்தைப் பார்ப்பதும், பார்க்காமல் இருப்பதும் தனிப்பட்ட நபரின் உரிமை. அதில் யாரும் தலையிட முடியாது. கட்டாயமாக படம் பார்க்கும் படி யாரும் யாரையும் வற்புறுத்தவில்லை.

600 கோடி ரூபாய் வசூல்:
இந்த படம் சர்வதேச அளவில் 600 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது. இதன் மூலம் இந்த படத்துக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது உறுதியாகியுள்ளது.

மோசமான சம்பவங்கள்:
சமூகத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களைத் தடுப்பது குறித்து தான் இந்த படத்தின் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

மனு தள்ளுபடி:
எனவே இந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகளை வெட்டவோ அல்லது இந்த படத்தை வெளியிடத் தடையோ விதிக்க முடியாது. எனவே, இம்மனுவானது தள்ளுபடி செய்யப்படுகின்றது" என்று உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications











