போட்டோ, பெயர் பயன்படுத்த தடை... அப்ப மட்டும் இப்படி சொல்லலையே: ரஜினியிடம் கேள்வியெழுப்பிய பிரபலம்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
ஜெயிலரை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கவுள்ள லால் சலாம் படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், தனது பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என ரஜினி அவரது வழக்கறிஞர் மூலம் அறிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த திடீர் அறிவிப்பு மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு நடிகர் கவிதா பாரதி சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.

ரஜினியின் திடீர் அறிவிப்பு
அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலரில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். ரஜினியுடன் மோகன்லால், சிவ ராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் தனது பெயர், புகைப்படம், போஸ்டர், குரல் போன்றவைகளை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார் ரஜினி.

வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ்
ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அவரது வழக்கறிஞர் இளம்பாரதி வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில், ரஜினியின் பெயர், போட்டோ, குரல் போன்றவற்றை உரிய அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு மக்களிடம் இருக்கும் ஆதரவை சில வர்த்தக நிறுவனங்கள் தவறாக பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அதாவது ரஜினியின் புகைப்படம், குரல், போஸ்டர் போன்றவற்றை பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக அவருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாம். அதன் காரணமாகவே ரஜினி தனது வழக்கறிஞர் மூலம் பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் கவிதா பாரதி கேள்வி
ரஜினியின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடம் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பிரபல நடிகரும் எழுத்தாளருமான கவிதா பாரதி ரஜினியிடம் கேள்வியெழுப்பியுள்ளார். அருவி, ரைட்டர், ராட்சசி, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் கவிதா பாரதி. பெரும்பாலும் நெகட்டிவான போலீஸ் கேரக்டரில் நடித்து பிரபலமான கவிதா பாரதி, சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்படுகிறார். இந்நிலையில் தான் ரஜினிக்கு தனது முகநூலில் கேள்வியெழுப்பியுள்ளார் கவிதா பாரதி.

அப்போ ஏன் கேக்கல?
அதில், "எம் பேரு, புகைப்படம், குரல் எதையும் அனுமதியில்லாம பயன்படுத்துனா சட்டப்பூர்வமா நடவடிக்கை எடுப்போம். அப்படின்னா ஜெயில்ல தள்ளுவோம். உங்க படத்துக்கு பிளாக்குல டிக்கெட் வித்தாங்களே, அப்ப இப்படிச் சொல்லலையே. அதெல்லாம் கேக்கப்படாது, காசை கொடுத்துப் படத்தைப் பாரு, கைதட்டு, ரசிகர் மன்றம் வெய்யி, கட் அவுட் வெச்சு பாலூத்து.. என் வீட்டுக்கு முன்னால வந்து வாழ்க கோஷம் போட்டு பூட்ன கேட்டை ஆட்டிட்டுப் போ. அவ்வளவுதான் உன் வேலை." என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு கீழ் ரசிகர்களும் பல கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











