சூப்பர் ஸ்டார் பட்டம் அவருக்கு மட்டும் தான்... விஜய், அஜித்க்கு அது செட் ஆகாது: மைக் மோகன் அதிரடி
கோவை: 80 முதல் 90களில் கோலிவுட்டின் வெள்ளிவிழா நாயகனாக வலம் வந்தவர் மோகன்.
மைக் மோகன், வெள்ளி விழா நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவர் மீண்டும் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நடிகர் மைக் மோகன் தனது கருத்தை அதிரடியாக தெரிவித்துள்ளார்.

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்
1977ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கோகிலா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மோகன். தமிழில் மூடுபனி திரைப்படம் மூலம் அடியெடுத்து வைத்தவர், அதன் பின்னர் வெள்ளிவிழா நாயகனாக கொண்டாடப்பட்டார். இளையராஜாவின் இசைக்கும் எஸ்பிபியின் குரலுக்கும் உருவம் கொடுத்து திரையில் உலவவிட்டால் அதில் மோகன் தான் தெரிவார். அப்படி இசை ரசிகர்களை தனது நடிப்பால் மயக்கியவர், மைக் மோகன் என்றே அழைக்கப்பட்டார். தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹரா படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து கருத்து
இந்நிலையில், கடந்த சில தினங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக காணப்படும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பற்றி அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார் மோகன். விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வரும் 11ம் தேதி ரிலீஸாகிறது. வாரிசுக்குப் போட்டியாக அஜித்தின் துணிவும் அதேநாளில் வெளியாகிறது. இதனிடையே வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார், விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், சூர்ய வம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே இதனை நான் கூறியிருந்தேன் என்றார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன், ரசிகர்களிடம் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்தே மோகனும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கு மட்டுமே சூப்பர் ஸ்டார் பட்டம்
முன்னதாக கோலிவுட்டில் விஜய் தான் நம்பர் 1 நடிகர் என வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு பேசியதும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி என்பவர், விஜய் தான் ரியல் சூப்பர் ஸ்டார். ரஜினி முன்னாள் சூப்பர் ஸ்டார் என சொன்னதும் அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி பேசியுள்ள மோகன், விஜய், அஜித் இருவரும் சூப்பர் ஸ்டார்கள் தான். ஆனால் பட்டம் என்றால் அது ரஜினிக்கு மட்டும் தான்.. ரஜினி சார் தான் சூப்பர் ஸ்டார், அந்த பட்டம் அவருக்கு கொடுக்கப்பட்டது. படத்தின் வெற்றி இயக்குநரின் கையில் தான் இருக்கிறது. படத்தின் கதை நன்றாக இருந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று மோகன் கூறியுள்ளார்.

இன்னும் டிக்கெட் கிடைக்கல
கோவை மாவட்டம் திருமலையாம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிறிய திரையரங்கு திறப்பு விழாவில் மோகன் கலந்துகொண்டார். அப்போது அவர் மாணவர்களிடம் திரைத்துறை தொடர்பாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து பேசிய மோகன், அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்களில் எதற்கு முதலில் டிக்கெட் கிடைக்கிறதோ அதை பார்ப்பேன். ஆனால் இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் பட்டம் என்றும் ரஜினிக்கு மட்டுமே சொந்தம் என மோகன் பேசியது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











