பாண்டியராஜன் மகன் காதல் திருமணம்... கேரள மாணவியை மணக்கிறார்!
நடிகர் - இயக்குநர் பாண்டியராஜன் மகனும் நடிகருமான ப்ரித்வி கேரள மாணவியை காதலித்து மணக்கிறார்.
‘கைவந்த கலை', ‘நாளைய பொழுதும் உன்னோடு', ‘பதினெட்டாம் குடி' ஆகிய படங்களில் நடித்திருப்பவர் ப்ரித்வி. இவர் நடிகர் பாண்டியராஜனின் மூத்த மகன். இவருக்கும், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி அக்ஷயாவுக்கும் காதல் ஏற்பட்டது.

கொச்சியை சேர்ந்த பிரேம்நாத் - ஷீலா தம்பதிகளின் மகள் அக்ஷயா. கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி-டெக் இறுதியாண்டு படித்து வருகிறார். ப்ரித்வி-அக்ஷயா காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக் கொண்டு, திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். அதைத் தொடர்ந்து, இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை 6.30 மணிக்கு நடந்தது.

கல்லூரி மாணவி அக்ஷயாவுடன் காதல் மலர்ந்தது பற்றி ப்ரித்வி கூறுகையில், "நானும் அக்ஷயாவும் சென்னையில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் முதன் முதலாக சந்தித்தோம். அப்போது எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு, ‘பதினெட்டாம் குடி' படப்பிடிப்புக்காக நான் கொச்சி சென்றேன். அப்போது அக்ஷயா மீண்டும் என்னை சந்தித்தார். எங்கள் நட்பு காதலாக மலர்ந்தது. எங்கள் காதலை பெற்றோர் ஏற்றுக் கொண்டனர்," என்றார்.


Click it and Unblock the Notifications











