கார்த்தியை அண்ணாமலை பட ஸ்டைலில் புகழ்ந்த சுகுமார்...எதுக்குன்னு தெரியுமா?
சென்னை : நடிகர் கார்த்தி செய்த காரியத்தை மிக நெகிழ்ச்சியாக, ரஜினியின் அண்ணாமலை பட டயலாக்கை குறிப்பிட்டு நடிகரும், டைரக்டருமான காதல் சுகுமார் புகழ்ந்துள்ளார். இவரின் சோஷியல் மீடியா பதிவை பார்த்து விட்டு பலரும் தங்களுக்கு தெரிந்த விபரங்களை பகிர்ந்ததுடன், கார்த்தியை பாராட்டியும் வருகின்றனர்.
பல படங்களில் காமெடி நடிகராக நடித்ததவர் சுகுமார். இவர் சக்தி, கலகலப்பு, விருமாண்டி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற பல படங்களில் சிறிய காமெடி ரோலில் நடித்திருந்தாலும், இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது காதல் படத்தில் தான். அந்த படத்தில் ஹீரோ பரத்தின் நண்பராக நடித்திருப்பார். அதற்கு பிறகு காதல் சுகுமார் என்றால் தான் இவரை பலருக்கும் தெரியும். இவர் நடிகர் மட்டுமல்ல டைரக்டரும் கூட. திருட்டு விசிடி, சும்மாவே ஆடுவோம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

புள்ளன்னா இப்பிடி இருக்கனும்
இவர் நடிகர் கார்த்தி பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சென்னையில் எங்கெங்கும் இப்போது பார்க்க முடிகிறது...10 ரூபாய்க்கு தரமான சாப்பாடு. நல்ல நண்பனாக. நல்ல தந்தையாக. நல்ல மனிதநேயனாக கார்த்தி மிளிருகிறார். தனது ரசிகர்களை வெறுமனே விசிலடிச்சான் குஞ்சுகளாக பார்க்காமல்...கரம் கொடுத்து சி(க)ரம் உயர வைக்கிறார். அண்ணாமலை படத்தில் வினுச்சக்கரவர்த்தி சொல்வாரே...புள்ளன்னு பெத்தா இப்பிடி ஒரு புள்ளையப் பெக்கணும். உதாரணம் கார்த்தி சார். வளர்ப்பு அப்படி. WELDON BOY என சுகுமார் பாராட்டி உள்ளார்.

இதுக்கு தான் அப்படி சொன்னாரா
இதற்கு காரணம் சென்னை வளசரவாக்கம் பகுதியில் உழவன் ஃபவுண்டேஷன் அமைப்பின் சார்பில் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கி வருகிறார்கள். இந்த ஃபவுண்டேஷனை நடத்துவது வேறு யாறுமில்லை. நடிகர் கார்த்தி தான். விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காக இந்த அமைப்பை அவர் நடத்தி வருகிறார். விவசாயிகளை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து உழவன் விருதுகள் என்ற விருதுகளையும் வழங்கி வருகின்றனர்.

இதெல்லாம் கூட செய்றாங்களா
விவசாயிகளுக்கு உதவுவதுடன் பல மாவட்டங்களில் உழவன் ஃபவுண்டேஷன் மூலம் நீர்நிலைகளை தூர்வாருவது போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர். சென்னையில் சமீபத்தில் தான் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் 10 ரூபாய்க்கு தரமான உணவு வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. எந்த விதமான விளம்பரமும் இல்லாமல் 150 நாட்களை கடந்து இந்த உணவகங்கள் இயங்கி வருவதை தான் நடிகர் சுகுமார் புகழ்ந்துள்ளார்.

கார்த்திக்கு குவியும் பாராட்டுக்கள்
கார்த்தியின் அண்ணன் நடிகர் சூர்யாவும் ஏற்கனவே அகரம் ஃபவுண்டேஷன் மூலம் பல ஏழை மாணவர்களின் கல்விக்காக உதவி வருகிறார். தற்போது விவசாயிகளுக்கு உதவும் வகையில் கார்த்தியும் களமிறங்கி உள்ளதை சோஷியல் மீடியாக்களில் பலர் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











