Vijay condolences: கரூர் உயிரிழப்பு.. தாங்க முடியாத வேதனை.. தவெக தலைவர் விஜய் அறிக்கை!
சென்னை: கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நடந்த இடத்தில் அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 40 பேர் உயிரிழந்தனர் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நடந்த சம்பவத்தால் இதயம் நொறுங்கிப் போய் இருப்பதாக தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் இன்று நாமக்கல் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக நாமக்கல்லுக்கு புறப்பட்ட விஜய்க்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.பிரசார வாகனத்தில் வந்த விஜய்க்கு மக்கள் புடைசூழ ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து கரூரில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது, கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டதால், பலர் மயங்கி விழுந்தனர். ஏதோ, இதையடுத்து பிரச்சார வாகத்தில் இருந்தபடியே விஜய் பலருக்கு தண்ணீர் பட்டிலை வீசினார்

40 பேர் பலி : இதையடுத்து, கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கிடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விசாரணை ஆணையம்: மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் நாளை கரூர் செல்வதாக இருந்த நிலையில், கோட்டையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்துவிட்டு, கரூர் புறப்பட்டு சென்றுள்ளார்.
விஜய் இரங்கல்: இந்நிலையில், கரூர் சம்பவம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











