மோசடி நிறுவனங்களின் விளம்பரம்- நடிகர், நடிகையருக்கும் சிக்கல்தான்.. ஏடிஜிபி எச்சரிக்கை
கோவை: மக்களை ஏமாற்றிவிட்டு பணத்தை சுருட்டும் ஈமு போன்ற மோசடி நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளையும் விசாரிக்க தமிழ்நாடு காவல்துறை திட்டமிட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி பிரதீப் வி.பிலிப் தெரிவித்தார்.

தானாக முன்வந்து வழக்கு
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொருளாதார குற்றப்பிரிவுக்கான, கூடுதல் டிஜிபி பிரதீப் வி.பிலிப் கூறியதாவது:
ஏதாவது ஒரு நிதி நிறுவனம் அளவுக்கு அதிகமான வட்டி தருவதாக விளம்பரப்படுத்தினாலோ அல்லது அறிவித்தாலோ, காவல்துறை தானாக முன்வந்து புகார் ஏதுமின்றியே, நடவடிக்கை எடுக்க முடியும்.

10 சதவீதம் வேண்டாமே..
முதலீட்டுக்கு 10 அல்லது அதற்கு மேல் சதவீதத்தில் வட்டி தருவதாக கூறும் எந்த ஒரு நிதி நிறுவனத்திலும் மக்கள் முதலீடு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் அவ்வாறு வட்டி தருவது நடைமுறையில் சாத்தியமில்லாதது.

பல நூறு கோடி மோசடி
தமிழக பொருளாதார குற்றப்பிரிவின் 2வது பிரிவு, கொங்கு மண்டலத்தில், இதுவரை, ஈமு, கோழிப்பண்ணை, கொப்பரை மோசடிகள் தொடர்பாக 95 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த மோசடிகள் மூலமாக, 23 ஆயிரத்து 676 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இழப்பு மதிப்பு, ரூ.485.91 கோடிகளாகும்.

184 பேர் கைது
குற்றம்சாட்டப்பட்ட 327 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 184 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 75 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர்களே சிந்தியுங்கள்..
மோசடி நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடிப்பதற்கு முன்பாக, நடிகர், நடிகைகள் யோசிக்க வேண்டும். மோசடி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தால் அந்த நடிகர்களின் பெயருக்கும் சேர்த்துதான் களங்கம் ஏற்படும். எனவே ஒரு விளம்பர படத்தில் நடிக்கும் முன்பாக, குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாடு குறித்து ஆராய்ந்து, அறிந்து கொள்ள வேண்டும்.

நீங்களும் சிக்குவீர்கள்..
அல்லது மோசடி நிறுவனங்களின் விளம்பர படங்களில் நடித்து மக்களை ஈர்த்த குற்றத்திற்காக நடிகர், நடிகைகளையும் விசாரணைக்கு உட்படுத்துவோம். இவ்வாறு பொருளாதார குற்றப்பிரிவுக்கான, கூடுதல் டிஜிபி பிரதீப் வி.பிலிப் தெரிவித்தார்.
ஈமு கோழி விளம்பரத்தில் நடிகை நமிதா தோன்றியிருந்தார். அதுபோல குணச்சித்திர நடிகர் பூவிலங்கு மோகனும் கூவி கூவி பொதுமக்களை அழைத்தனர். இவர்கள் மீதெல்லாம் பொருளாதார குற்றப்பிரிவின் பார்வை பதிந்துள்ளது


Click it and Unblock the Notifications











