ரிசார்ட்ஸில் போதை பார்ட்டிக்கு பரபர ஏற்பாடு.. போலீஸ் நடத்திய அதிரடி ரைடு.. நடிகை கைது!
கொச்சி: போதை பார்ட்டி நடக்க இருந்த போலீஸ் நடத்திய அதிரடி சோதனையில் நடிகை உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னட சினிமா துறையில் போதைப் பொருள் பழக்கம் இருப்பதை அடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து அங்கு சிலர் கைது செய்யப்பட்டனர்.

சஞ்சனா கல்ராணி
நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் சஞ்சனாவுக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே கேரளாவைச் சேர்ந்த சிலர் சம்பந்தப்படுள்ளதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக, கேரள மார்க்சிஸ்ட் தலைவர் மகன் பினீஷ் கொடியேறி கைது செய்யப்பட்டார்.

வாகமண் பகுதி
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் சிலரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமான வாகமண் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் போதைப் பார்ட்டி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ரிசார்ட்டில் ரைடு
இதையடுத்து, அவர்கள் இரவில் சென்று அந்த ரிசார்ட்டில் அதிரடி ரைடு நடத்தினர். அதில் அங்கு போதைப் பவுடர் உட்பட ஏழு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அங்கு மலையாள சினிமாவைச் சேர்ந்த சில நடிகர், நடிகைகள் வருவதாக இருந்தனர்.

தப்பி விட்டனர்
இந்த ரைடு பற்றிய தகவல் சென்றதை அடுத்து அவர்கள் வராமல் தப்பி விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அங்கு கைப்பற்ற போதைப் பொருட்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டது என்றும் அனைத்தும் தடைசெய்யப்பட்ட எம்டிஎம்ஏ, எல்எஸ்டி உட்பட பல்வேறு போதை மாத்திரைகள் என்றும் போலீசார் கண்டுபிடித்தனர்.

பிரிஸ்டி பிஸ்வாஸ்
இதையடுத்து தொடுபுழாவைச் சேர்ந்த அஜ்மல் ஜாகீர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் வளர்ந்து வரும் நடிகை, பிரிஸ்டி பிஸ்வாஸ். இவர் சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். மாடலிங்கும் செய்து வருகிறார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலிவுட் பிரபலங்கள்
இது, மலையாள சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட்டில் நடிகை ரியா சக்கவர்த்தி உட்பட சில பிரபலங்கள் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டனர். தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் உட்பட சில நடிகைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











