இந்தியன் 2 விபத்து: உயிரோடு இருந்து இதை டிவிட்ட ஒரு நொடிதான்.. நூலிழையில் தப்பித்த காஜல் உருக்கம்!
Recommended Video
சென்னை: இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் தான் நூலிழையில் தப்பித்தது குறித்து உருக்கமாக டிவிட்டியிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் ஷுட்டிங் சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்காக பிரமாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மூன்று பேர் பலி
இதன் படப்பிடிப்பு இரவு பகலாக நடைபெற்று வருகிறது. ஏராளமான ஊழியர்களும் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு படப்பிடிப்பின் போது லைட்டுகளுக்காக பயன்படுத்தப்பட்ட பிரமாண்ட கிரேன் சரிந்து விழுந்தது. இதில் சிக்கி கார்ட்டூனிஸ்ட் மதனின் மருமகனான உதவி இயக்குநர் கிருஷ்ணா, புரடெக்ஷன் அசிஸ்டென்ட் மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.

ஈவிபி பிலிம் சிட்டி
இந்த விபத்தில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இயக்குநர் ஷங்கரும் நடிகர் கமல்ஹாசனும் அப்போதுதான் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ஈவிபி பிலிம் சிட்டியில் இருந்து வெளியேறினர். இருப்பினும் விபத்து தகவலை அறிந்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றனர்.
வார்த்தைகள் இல்லை
இந்நிலையில் விபத்தின் போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த நடிகை காஜல் அகர்வால், நடந்தது குறித்து உருக்கமாக டிவிட்டியிருக்கிறார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் என்னுடன் பணியாற்றியவர்களின் எதிர்பாராத மரணம், எனக்குத் தரும் மனவலியை விவரிக்க வார்த்தைகள் இல்லை. கிருஷ்ணா, சந்திரன் மற்றும் மது. உங்கள் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், தனிமையான இந்தத் தருணத்தில் கடவுள் அவர்களுக்கு வலிமையை தரட்டும்.
உயிரின் மதிப்பு
நேற்றிரவு நடந்த பயங்கரமான கிரேன் விபத்தில் அதிர்ச்சி, குழப்பம், ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறேன். உயிரோடு இருந்து இந்த ட்வீட்டைப் பதிவேற்ற ஒரு நொடிதான் ஆனது. அந்த ஒரு தருணம். நன்றியுணர்வோடு இருக்கிறேன். நேரம் மற்றும் உயிரின் மதிப்பு குறித்து நிறைய கற்றுக்கொண்டேன்" என்று திகில் குறையாமல் உருக்கமாக தெரிவித்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.


Click it and Unblock the Notifications











