Roja: வெற்றி வேல் முருகனுக்கு வெள்ளி வேல் காணிக்கையாக்கிய நடிகை ரோஜா.. திருத்தணியில் பக்திப் பரவசம்!
திருத்தணி: தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக உள்ளது திருத்தணி தான். தலைநகர் சென்னையில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் இடம் பெற்றுள்ள இந்த கோவிலுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் எந்த அளவுக்கு வருகிறார்களோ, அதே அளவுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்தும் பக்தர்கள் அதிகம் வருவது உண்டு. இந்நிலையில் நடிகையும் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா திருத்தணி முருகனுக்கு காவடி தூக்கிக் கொண்டு வந்து இரண்டு கிலோ எடையுள்ள வெள்ளி வேல் ஒன்றை காணிக்கையாக முருகனுக்கு சாத்தியுள்ளார்.
நடிகை ரோஜா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நிகையாக திகழ்ந்தவர். இவர் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் தொடங்கி, கிளாமர் கதாபாத்திரங்கள் வரை என அனைத்திலும் ஸ்கோர் செய்தவர். ஸ்ரீலதா ரெட்டி என்ற இயற்பெயரை சினிமாவுக்காக ரோஜா என மாற்றிக் கொண்டார். இவரது பெயரை ரோஜா என மாற்றியவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தான். பிறகாலத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்பது தனிக்கதை.

நடிகை டூ அமைச்சர்: தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ரோஜா ஜோடியாக நடித்துள்ளார். சொந்த மாநிலம் ஆந்திரா என்பதால், தான் பிறந்த மாநிலத்தின் அரசியலில் தானும் பங்கு கொள்ள வேண்டும் என தன்னை 1999ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைத்துக் கொண்டார். அதன் பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைத்துக் கொண்டார். இது மட்டும் இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். அதாவது 2019 ஆம் ஆண்டு நகரி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல், ஆந்திர மாநில, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பணியாற்றினார்.
அரசியலில் சரிவு: கடந்த ஆண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். அதுவும் தான் எந்த கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாரோ அதே கட்சியின் வேட்பாளரால் வீழ்த்தப்பட்டார். அதாவது தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளர் காலி பானு பிரகாஷ் என்பவரிடம் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இரண்டு கிலோ வேல்: இந்நிலையில் அடுத்த முறை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என தீவிரமான களப்பணிகளை ரோஜா செய்து வருகிறார். இதைப் பார்த்த அந்த மக்கள், இதை ஆட்சிக்காலத்தில் செய்திருந்தால் மீண்டும் வெல்ல வைத்திருப்போமே எனவும் விமர்சித்து வருகிறார்கள். ரோஜா தற்போது திருத்தணி முருகனுக்கு காவடி தூக்கிக் கொண்டு சென்றுள்ளார். இது மட்டும் இல்லாமல், இரண்டு கிலோ எடையுள்ள வெள்ளி வேல் ஒன்றையும் திருத்தணி முருகனுக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வெள்ளி வேலின் விலை, இன்றைய மார்க்கெட் நிலவரப்படி சுமார் மூன்று லட்சம் முதல் 3.25 லட்சங்கள் வரை வரலாம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











