‘மகனை மீட்டுத் தாருங்கள்..’ கணவருக்கு எதிராக நடிகை ஷர்மிளா போலீசில் பரபரப்புப் புகார்
சென்னை: தனது மகனைத் தனது கணவரிடம் இருந்து மீட்டுத் தரும்படி சென்னைக் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் நடிகை ஷர்மிளா.
சுமார் 52 படங்களில் நடித்தவரான நடிகை ஷர்மிளா நேற்று, சென்னை கமிஷ்னர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது கணவரிடமிருந்து தன் மகனை மீட்டுத் தரும் படி கோரியிருந்தார். அவர் கொடுத்துள்ள புகார் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

நான் நடித்தப் படங்கள்...
நான் ‘கிழக்கே வரும் பாட்டு, ஒயிலாட்டம், முஸ்தபா, இவன் வேற மாதிரி' போன்ற 52 படங்களில் நடித்துள்ளேன். நடிகர்கள் பிரசாந்த், நெப்போலியன் ஆகியோருடன் கதாநாயகியாக படங்களில் நடித்து இருக்கிறேன்.

காதல் திருமணம்....
புகழின் உச்சியில் இருக்கும்போது, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டேன். தற்போது 5 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறான். 1-வது வகுப்பு படிக்கிறான்.

பிரிந்து வாழ்கிறோம்....
எனது கணவர் ஸ்ரீபெரும்புதூரில், செல்போன் கம்பெனியில் என்ஜினீயராக வேலைபார்க்கிறார். எங்கள் குடும்ப வாழ்க்கையில் இப்போது பெரும்புயல் வீசி விட்டது. எனது கணவரும், நானும் தனித்தனியாக பிரிந்து வாழ்கிறோம். நான் சென்னை சாலிகிராமத்தில் வசிக்கிறேன். எனது கணவர் ஸ்ரீபெரும்புதூரில் அவரது தாயாருடன் வாழ்கிறார்.

கணவரின் சந்தேகம்....
எனது கணவர் என் மீது சந்தேகப்பட்டார். அவருக்கு சினிமாவில் நடித்து பணமும் சம்பாதித்து கொடுக்கவேண்டும். ஆனால், நான் யாருடனும் பேசக்கூடாது. சினிமா சூட்டிங்கிற்கு பகலில் மட்டும்தான் போகவேண்டும். அவருக்கு இரவில் நல்ல மனைவியாக நடந்து கொள்ளவேண்டும். அவரது தாயாருக்கு நல்ல மருமகளாகவும் இருக்க வேண்டும்.

விவாகரத்து முடிவு....
சினிமாவில் நடித்ததால், எனது கணவர் விருப்பப்பட்ட மேற்கண்ட எதையும் நிறைவேற்றுவது கடினமாக இருந்தது. இதனால் எனக்கும், எனது கணவருக்கும் கருத்து வேறுபாடு, மோதல் ஏற்பட்டது. கணவரை விட்டு பிரிந்து விட்டேன். அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டேன்.

குழந்தை கடத்தல்...
எனது குழந்தை என்னுடன்தான் இருந்தான். ஆனால் கடந்த மாதம் 23-ந்தேதி அன்று, எனது குழந்தையை, எனது கணவர் கடத்திச் சென்றுவிட்டார். இப்போது எனது குழந்தை எங்கு இருக்கிறான், என்று தெரியவில்லை.

மன உளைச்சல்...
இரவில் செல்போனில் பேசி எனது கணவர் என்னை மிரட்டுகிறார். எனது குழந்தையை, செல்போனில் என்னை திட்டி பேசவைக்கிறார். இதன்மூலம் என்னை மன உளைச்சல் அடைய செய்கிறார். இரவில் தூங்கவிடாமல், தொல்லை கொடுத்து செல்போனில் பேசுகிறார்.

உயிருக்கு ஆபத்து....
எனது குழந்தையை மீட்டு தரவேண்டும். அவனது படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எனது கணவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறேன். எனக்கு உரிய பாதுகாப்பு தரவேண்டும்' என இவ்வாறு ஷர்மிளா தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











