பிரபல நடிகரின் மகன் போதைப்பொருள் வைத்திருந்ததாக பெங்களூருவில் கைது! கிடுக்கிப்பிடி போடும் போலீஸ்!
பெங்களூர் : பாலிவுட்டின் பிரபல நடிகர் சக்தி கபூர், இவரது மகன் மற்றும் மகள் இருவரும் பாலிவுட்டில் நடிகர்களாக உள்ளனர்.
ஷ்ரத்தா கபூரின் சகோதரர் சித்தாந்த் கபூரே தற்போது போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஷ்ரத்தா கபூரிடம் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகர் சித்தாந்த் கபூர்
பாலிவுட்டில் சிறப்பான நடிகராக இருந்த நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கபூர் மற்றும் மகள் ஷ்ரத்தா கபூர். இவர்கள் இருவரும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றனர். குறிப்பாக ஷ்ரத்தா கபூர் முன்னணி நடிகைகள் பட்டியலில் காணப்படுகிறார். முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

ஷ்ரத்தா கபூரிடம் விசாரணை
பாலிவுட்டில் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தையொட்டி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், தொடர்ந்து நடிகர்கள் மற்றும் நடிகைகளிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் ஷ்ரத்தா கபூரிடமும் கடந்த ஆண்டில் விசாரணை நடத்தப்பட்டது. வாட்ஸ்அப்பில் மேற்கொள்ளப்பட்ட உரையாடல்களை அடிப்படையாக கொண்டு இந்த விசாரணை நடத்தப்பட்டது.

ஷ்ரத்தாவின் சகோதரர்
இதுவரை இந்த வழக்கில் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் வட்டத்தில் ஷ்ரத்தா கபூர் உள்ளார். இந்நிலையில் தற்போது அவரது சகோதரர் சித்தாந்த் கபூர் போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்கள்
சித்தாந்த் கபூர் கடந்த 2020ல் வெளியான பாவ்க்கல் என்ற வெப் தொடரில் சிந்து தேதா கதாபாத்திரத்தில் நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றார். தொடர்ந்து இவரது நடிப்பில் சூட்டவுட் அட் வடாலா, அக்லி, ஹசீனா பார்க்கர், செஹ்ரே போன்ற படங்கள் வெளியாகின.

பார்ட்டியில் போதைப்பொருள்
இவர் பாகம் பாக், சுப் சுப் கே, பூல் புலையா, டோல் போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து இயக்குநராகும் கனவுடன் இவர் உள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் பெங்களூருவில் பிரபல ஹோட்டலில் நடைபெற்ற பார்ட்டியில் கலந்துக் கொண்டவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

சித்தாந்தை கைது செய்த போலீஸ்
அப்போது அங்கிருந்தவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் சித்தாந்த் கபூர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்து பெங்களூரு போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவருடன் சேர்த்து 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

35 பேரிடம் சோதனை
பார்ட்டியில் கலந்துக் கொண்ட 35 பேர்களிடம் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் சித்தாந்த் உள்ளிட்ட 6 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இதையடுத்தே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலிவுட்டில் தொடர்ந்து போதைப்பொருள் பயன்பாடு சர்ச்சைக்குரிய விஷயமாக காணப்படுகிறது.

அடுத்தடுத்த போதைப்பொருள் விவகாரங்கள்
பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் இதேபோல கப்பலில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு, பின்பு அந்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என்று விடுவிக்கப்பட்டார். இதனால் ஷாருக்கான் மனஉளைச்சலுக்கு ஆளானதும் நடந்தது.


Click it and Unblock the Notifications











