'சிவாஜியை விட அதிக அரங்குகளில்'... அஞ்சானுக்கு எதுக்கு இந்த பப்ளிசிட்டி?
சென்னை: பரபரப்புக்காக அபிராமி ராமநாதன் ரஜினி பற்றி அல்லது அவரது படங்கள் பற்றி எதையாவது சொல்லி வைப்பதும், அதை வைத்து மீடியா எதையாவது எழுதுவதும் வாடிக்கையாகிவிட்டது.
அவர் சமீபத்தில் கூறியிருப்பது, 'சிவாஜி படத்தைவிட அஞ்சானுக்கு அதிக திரையரங்குகள் சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ளன,' என்பதுதான்.
அப்படி என்ன இது பெரிய சாதனை..? பார்க்கலாம் வாங்க!

37 அரங்குகள்
சூர்யா-சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘அஞ்சான்' வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. இந்தப் படத்துக்கு சென்னையில் சுமார் 37 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. படத்தை சென்னையில் வெளியிடுபவர் அபிராமி ராமநாதன்.

அபிராமி ராமநாதன்
இதுகுறித்து அவர் கூறுகையில், "அஞ்சான்' படத்தின் சென்னை நகரத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ளோம். இதற்கு முன்னாள் பல படங்களுக்கு நாங்கள் விநியோக உரிமை பெற்றுள்ளோம். முன்பெல்லாம் ஒரு படம் வெளியாகிறதென்றால் 5 தியேட்டர்களுக்கு மேல் திரையிடமாட்டார்கள். அதை உடைத்தெறிந்து ‘சிவாஜி' படத்தை சென்னை நகரில் 18 திரையரங்குகளில் வெளியிட்டோம். அது மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இப்போது அதை நிறைய பேர் பின்பற்ற தொடங்கியிருக்கிறார்கள்.

சிவாஜியை விட
தற்போது அதே வெற்றிப்பாதையில் நடந்து ‘அஞ்சான்' படத்தை 37 தியேட்டர்களில் வெளியிடவிருக்கிறோம். சென்னை நகரத்தில் வாழும் யாரும் படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று திருட்டு விசிடியை நோக்கிப் போய்விடக்கூடாது. நடந்து போகிற தூரத்தில் ஒரு தியேட்டரில் படம் பார்க்கலாம். அதற்காகவே இத்தனை தியேட்டர்களில் வெளியிட்டுள்ளோம்.

ஆன்லைன் பதிவு
இந்த படத்தின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவை நேற்று இரவு ஆரம்பித்தோம். ஆரம்பித்த 2 மணி நேரத்தில் 5000 டிக்கெட் விற்று தீர்ந்தது. இது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்தப் படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

ஏழு ஆண்டுகள் ஆச்சு சாரே...
அபிராமி ராமநாதன் சிவாஜியை வெளியிட்டது 2007-ல். அதன்பிறகு ஏழு ஆண்டுகளில் தமிழ் சினிமாவை வெளியிடும் போக்கு ரொம்பவே மாறிவிட்டது.

கோச்சடையானுக்கு 57 அரங்குகள்
சிவாஜியைப் பின்பற்றி நிறையப் படங்கள் அதிக அரங்குகளில் வெளியிடப்பட்டன. ரஜினி நடித்த எந்திரன் படம் சென்னையில் 44 அரங்குகளில் வெளியானது. சமீபத்தில் வெளியான கோச்சடையான் படம் 57 அரங்குகளில் வெளியானது.

இது சாதனையா?
இதில் 37 அரங்குகளில் அஞ்சான் வெளியாவது எப்படி பெரிய சாதனையாகிவிட முடியும்? அஞ்சானுக்கு கூடுதல் விளம்பரம் வேண்டும் என்பதற்காக ரஜினி படத்தை துணைக்கு இழுக்கிறார் போலிருக்கிறது அபிராமி ராமநாதன்!


Click it and Unblock the Notifications











