காற்றில் ஒரு ராஜாளி... துருவங்கள் பதினாறுக்கு உதவிய ஏ ஆர் ரஹ்மான்!
'துருவங்கள் பதினாறு' படத்துக்கு ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரஹ்மான் செய்த உதவி அந்தப் படத்தின் அறிமுக இயக்குநரை நெகிழ வைத்திருக்கிறது.
இதுகுறித்து கார்த்திக் நரேன் கூறுகையில், "எங்கள் 'துருவங்கள் பதினாறு' படக்குழு முழுக்க இளைஞர்கள்தான். படத்தில் நடிக்க நடிகர் ரகுமான் சம்மதித்தால் போதும் என்று இருந்தோம். ஏனென்றால் அவரை விட்டு விட்டு வேறு யாரையும் அந்தப் பாத்திரத்திற்கு என்னால் நினைக்க முடியவில்லை. அவர் எங்கள் குழுவுக்குள் வந்தபிறகு தொடங்கியது எல்லாமே நன்மையில் முடிய ஆரம்பித்தது. நாலா பக்கமிருந்தும் நல்லெண்ண அதிர்வலைகள் வர ஆரம்பித்து விட்டன. அதுவே எங்களை முன்னோக்கி வழி நடத்தியது.

எங்கள் படக்குழுவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சார் செய்த உதவியும் அளித்த ஊக்கமும் தந்த ஆதரவும் எங்களுக்குப் பலம் சேர்த்தது. அவர் எங்கள் படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார். அது யூட்யூபில் பெரிய ஹிட்டடித்தது. அதன் பிறகு எங்கள் படம் பற்றிய எதிர்பார்ப்பு விஸ்வரூபமெடுக்க ஆரம்பித்து விட்டது. புல்வெளியில் கிடந்த நாங்கள் விண்வெளியில் மிதக்கும் உணர்வைப் பெற்றோம் .
சிறிய அளவில் அகல் விளக்கு போல இருந்த படம் பகல்விளக்கு சூரியன் போல பெரிதாகிவிட்டது. அது படத்தின் வியாபாரத்துக்கு பெரிதும் உதவியது. ட்ரீம் பேக்டரி, வீனஸ் இன்போடெய்ன் மெண்ட் என பெரிய நல்ல நிறுவனங்கள் படத்தை வெளியிட முன்வந்தன.
படம் டிசம்பர் 29--ல் வெளியாக இருக்கிறது. இப்படத்தினை விளம்பரப் படுத்தும் வகையில் 'காற்றில் ஒரு ராஜாளி', என்கிற ப்ரோமோ சாங் அதாவது விளம்பரப் பாடலை உருவாக்கி இருக்கிறோம். அதை ஏ ஆர் ரஹ்மான் ட்விட்டரில் வெளிட்டுள்ளார். அவர் கைபட்டதும் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டது படம்.
எங்கள் முயற்சிக்கு ஆதரவும் ஊக்கமும் தந்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு எங்கள் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மன உணர்வை வெளிப்படுத்த நன்றி தவிர வேறு வார்த்தைகளைத் தேடுகிறேன்,'' என்கிறார் கார்த்திக் நரேன் நெகிழ்ச்சியுடன்.


Click it and Unblock the Notifications











